×

வதந்திகளுக்கு முற்றுப்பு... விரைவில் தொடங்கும் ‘விடாமுயற்சி’ ஷூட்டிங்... அதிரடியாக அறிவித்த லைக்கா !

 

அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் கைவிடப்படுவதாக வந்த தகவலுக்கு லைக்கா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

 பிரபல நிறுவனமான லைக்கா பல பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் அஜித்தின் ‘விடாமுயற்சி’ தயாரிப்பதாக கடந்த ஆண்டு அறிவித்தது. முதலில் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் இந்த படத்திலிருந்து விலகிவிட்டார். 

இதையடுத்து தடம், கலகத்தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கி மகிழ் திருமேனி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ப்ரீ பிரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றர். இதற்கிடையே அஜித் தொடர்ந்து பைக் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் ‘விடாமுயற்சி’ படத்தை லைக்கா கைவிடவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை லைக்கா தற்போது மறுத்துள்ளது. 

லைக்கா தயாரிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஸ்கரனிடம், ‘விடாமுயற்சி’ குறித்து ரசிகர்கள் அப்டேட் கேட்டு ஆர்ப்பரித்தனர். அதற்கு பதிலளித்த அவர், ‘விடாமுயற்சி’ திரைப்படம் லைக்காவிற்கு மிக முக்கியமான படம். அது இனிமேல் தாமதமாகாது. அந்த படம் ரசிகர்களுக்கு சூப்பரான ட்ரீட்டாக இருக்கும் என சுபாஸ்கரன் அதிரடியாக கூறினார். இதை கேட்ட ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.