×

துருவ் விக்ரம் படத்தை துவங்கும் மாரி செல்வராஜ்... எப்போது தெரியுமா ? 

 

துருவ் விக்ரமின் படத்தை விரைவில் இயக்குனர் மாரி செல்வராஜ் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக மாறிவிட்டார் மாரி செல்வராஜ். ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், கர்ணன் படத்தின் மூலம் தன்னை வெற்றி இயக்குனராக நிலை நிறுத்திக்கொண்டார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு உதயநிதியை வைத்து ‘மாமன்னன்’ படத்தை இயக்கினார். அந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

‘மாமன்னன்’ படத்தின் ரிலீசுக்கு முன்னர் சிறிய இடைவெளியில் ‘வாழை’ என்ற படத்தையும் இயக்கி முடித்துள்ளார். சிறிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள அந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இதற்கிடையே ‘மாமன்னன்’ படத்திற்கு முன்னரே துருவ் விக்ரமை வைத்து ஒரு புதிய படம் இயக்க இருந்தார். ஆனால் உதயநிதி கேட்டுக்கொண்டதால் ‘மாமன்னன்’ படத்தில் கமிட்டானார். ‘மாமன்னன்‘ திரைப்படம் வெளியாகிவிட்ட நிலையில் தற்போது மீண்டும் துருவ் விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க தயாராகி வருகிறார். 

பா ரஞ்சித் நீலம் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ஒரு கபடி விளையாட்டு வீரரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகிறது. தமிழக கபடி வீரர் ஒருவர், தேசிய அளவில் உயர்ந்து ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வெல்வதே படத்தின் கதைகளமாக அமைக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழக கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாறுதான் இந்த படமாக உருவாகிறது. இந்த படத்தின் கதைக்களம் 1990 காலக்கட்ட பின்னணியில் உருவாகிறது. 

இந்த படத்திற்கு கடந்த மாதங்களாகவே துருவ் விக்ரம் சில பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் துருவ் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் இறுதியில் தூத்துக்குடியில் தொடங்கவுள்ளது. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.