×

‘இயக்குநர் மாரிசெல்வராஜ்’ இயக்கத்தில் ‘துருவ் விக்ரம்’! –அவரே வெளியிட்ட அடுத்த பட அப்டேட்.

 

கோலிவுட்டில் தவிர்க்க முடியாத இயக்குநர்கள் வரிசையில் உள்ள இயக்குநர் மாரிசெல்வராஜ். இவர் பரியேரும் பெருமாள் படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தொடர்ந்து, தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கி சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்தார். இந்த நிலையில் தற்போது இவர் உதயநிதியின் கடைசி படமாக தயாராகியுள்ள ‘மாமன்னன்’ படத்தை இயக்கியுள்ளார், அதனை தொடர்ந்து வாழை படத்தையும் இயக்கியுள்ளார். இரண்டு படங்களும் வெளியீட்டிற்காக தயாராகும் நிலையில், தற்போது மாரி செல்வராஜ் தனது அடுத்த படம் குறித்தும் அப்டேட் வெளியிட்டுள்ளார்.

பெம்மை நாயகி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் மாரிசெல்வராஜ் கூறியதாவது” துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது; மாமன்னன், வாழை ஆகிய படங்களில் பிசியாக இருந்ததால் தான் துருவ் விக்ரம் படத்தின் பணிகள் தள்ளிபோனது, இந்த படம் நீலம் புரொடக்ஷனின் தயாரிப்பாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமோக்கான பாலா இயக்கிய ‘வர்மா’ படத்தில் நடித்தார். ஆனால் சில பல பிரச்சனைகளால் தயாரிப்பு நிறுவனம் படத்தின் இயக்குநரை மாற்றி ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் வேறு இயக்குநரை வைத்து மீண்டு அதே படத்தை இயக்கி வெளியிட்டனர். தொடர்ந்து விக்ரம் உடன் ‘மகான்’ படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.