'கராத்தே பாபு' டீசரை பார்த்து போன் செய்த அமைச்சர் சேகர்பாபு.. ரவி மோகன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்...!
நடிகர் ரவி மோகன் 'மக்கள் முதல்வரின் மனிதநேய விழா-2025' நிகழ்வில் 'கராத்தே பாபு' பட டீசரை பார்த்து அமைச்சர் சேகர்பாபு நகைச்சுவையாக வாழ்த்து தெரிவித்ததை பகிர்ந்துள்ளார்.
சென்னையில் ‘மக்கள் முதல்வரின் மனிதநேய விழா-2025’ நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் ரவி மோகன் பேசுகையில், “ஜெயம் ரவி என்கிற பெயர் அன்பு நண்பர்களால், ரசிகர்களால் எனக்கு கிடைத்த பெயர். இன்று ரவி மோகனாக உங்கள் முன்பு வந்து நிற்கிறேன்.இப்படி ஒரு வசனத்தை ‘கராத்தே பாபு’ என்ற படத்தில் பேசியிருந்தேன். அதன் டீசரை பார்த்துவிட்டு எனக்கு அமைச்சர் சேகர்பாபுவிடம் இருந்து ஒரு ஃபோன் கால் வந்தது. எனக்கும் வந்தது. என் படத்தின் இயக்குநருக்கும் வந்தது. அவரைப் பார்க்க போனோம். ‘என்னப்பா கராத்தே பாபுன்னு படம் எடுக்குறீங்களாம். அந்த கேரக்டர் நம்மல மாதிரியே இல்லையா’ என கூறினார்.
இயக்குநர் அதற்கு அப்படியெல்லாம் இல்லை என்று மழுப்பலாக பதில் சொன்னார். உடனே சேகர்பாபு, ‘தம்பி நான் தான்பா கராத்தே பாபு’ என்றார். இப்படி நகைச்சுவையாகவும், அன்பாகவும், அந்தப் படத்துக்கு வாழ்த்து சொன்ன சேகர்பாபுவுக்கு என்னுடைய நன்றிகள்” என்றார். ‘டாடா’ படத்தின் இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் ‘கராத்தே பாபு’. இந்தப் படத்தில் சக்தி, நாசர், கே.எஸ்.ரவிகுமார், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.