×

இசையமைப்பாளர் இனியவன் மறைவிற்கு கவிஞர் வைரமுத்துவின் இரங்கல்!

 

இசையமைப்பாளர் இனியவன் நேற்று முன்தினம் காலமாகியுள்ளார். 

இசையமைப்பாளர் இனியவன் தமிழில் தப்பு, சிரித்தால் ரசிப்பேன் உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்துள்ளார்.  இந்நிலையில்நேற்று முன்தினம் அவர் மாரடைப்பால் காலமாகியுள்ளார். கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகளை மக்கள் ரசிக்கும் வகையில் தந்தவர் இனியவன். 

அவரது மரணம் குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் பதிவு பின்வருமாறு:

“இசை அமைப்பாளர் இனியவன் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மிகச்சிறந்த இசை அமைப்பாளர். தஞ்சை மாவட்டத்துக்காரர். தேர்ந்த இயக்குனர்களிடம் இவர் கைகோர்த்திருந்தால் திரை இசையைக் கலக்கியிருப்பார். 

‘கவுரி மனோகரி’ படத்தில் கே.ஜே.ஜேசுதாசும் - எஸ்.பி.பியும் இணைந்து பாடிய “அருவி கூட ஜதியில்லாமல் சுரங்கள் பாடுது” பாடல் கேட்டால் இவர் ஆற்றல் புரியும். தலைவர் பிரபாகரனுக்குப் பிடித்த பாடல் அது என்று ஒரு ஈழ நண்பர் என்னிடம் சொன்னார். எனது ‘ஜென்மம் நிறைந்தது’ பாடலுக்கும் இசை இவரே. 

ஐந்து நாட்களுக்கு முன்பு கூட பேசினோம். நல்ல உடல் நலனோடு இருந்தார். ‘ஓடங்கள்’ பட இசை அமைப்பாளர் சம்பத் செல்வத்திடம் இசை உதவியாளராக இருந்து அவர் மூலம் தனக்கு அறிமுகம் ஆனவர். நீண்ட கால நண்பர். இவரது உடல் சொந்த ஊரான தஞ்சைப் பகுதியில் அடக்கம் செய்யப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.