×

எஸ்.ஜே.சூர்யாவின்  ‘கில்லர்’ படத்தில் இணைந்த இசைப்புயல்.. 

 


எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் ‘கில்லர்’ படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு  வெளியாகியுள்ளது.  

1999ல் அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘வாலி’படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக கால் பதித்தார் எஸ்.ஜே.சூர்யா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய்யை வைத்து 'குஷி' படத்தை இயக்கினார். அடுத்தடுத்த படங்களின் வெற்றி மூலம் தன்னை தவிர்க்க முடியாக இயக்குநராக நிலைநிறுத்திக்கொண்ட  எஸ்.ஜே.சூர்யா,  அதனைத்தொடர்ந்து ‘நியூ', ‘அன்பே ஆருயிரே' போன்ற படங்களை இயக்கி தானே கதாநாயகனாகவும் களம் இறங்கினார். எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் கடைசியாக 2015-ம் ஆண்டு வெளியான படம்  ‘இசை’. இந்தப்திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாததால், அதன்பிறகு தொடர்ந்து படங்கள் இயக்குவதை தவிர்த்துவிட்ட அவர்,  முழுநேர நடிகராகவே மாறிவிட்டார். 

இந்நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.  ‘கில்லர்’ என பெயரிடப்பட்டுள்ள அந்தப்படத்தை இயக்கி, அதில் அவரே ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.  ‘கில்லர்’ படத்தில் நடிகை பிரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்கிறார்.  ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிக்கும் இந்தப்படம்   தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் என கூறப்பட்டுள்ளது.  இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த  ஜூன் 27ம் தேதி பூஜையுடன் தொடங்கிய நிலையில், இந்தியாவிலும், மெக்ஸிகோவிலும் படப்பிடிப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வரும் நிலையில், இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு இன்று  (ஜூலை 7) காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் , கில்லர் படத்திற்கு இசையமைக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எஸ்.ஜே.,சூர்யா, “

நாம் இருவரும் சேரும் சமயம்
நம் கைகளிலே வரும் இமயம்
நாம் தொட்டது எதுவும் அமையும்
இது அன்பால் இணைந்த இதயம்
இது அன்பால் இணைந்த இதயம்” என்று குறிப்பிட்டுள்ளார்.