"இப்படத்தின் மூலம் 1000 இளைஞர்களாவது ராணுவத்தில் சேர்வார்கள்"-நேதாஜி கதை படமாகிறது
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு ‘சுபாஷ்’ என்ற பெயரில் படம் உருவாகி வருகிறது. ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை ஆனந்த் வி.பிரசாத் இயக்குகிறார். சுபாஷ் சந்திர போஸ் வேடத்தில் ஆர்யன் ஷ்யாம் நடிக்கிறார். இவர் இந்தியன் வங்கி நிறுவனர் வி.கிருஷ்ணசாமி ஐயரின் கொள்ளுப் பேரன் ஆவார். இப்படம் நேதாஜியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், அசைக்க முடியாத தேசப்பற்று மற்றும் இந்திய விடுதலை போராட்டத்தில் அவர் வகித்த முக்கிய பங்கை வெளிப்படுத்தும் விதமாக உருவாகியுள்ளது.
படம் குறித்து ஹீரோ ஆர்யன் ஷ்யாம் பேசுகையில், ‘நேதாஜி வேடத்தில் நடிப்பது எனக்கு மிக பெரிய பெருமையும், மிகுந்த பொறுப்பும் ஆகும். தனது தியாகங்களாலும், உயர்ந்த கொள்கைகளாலும் நம் தேசத்தை வடிவமைத்த ஒரு மகத்தான ஆளுமைக்கு முழுமையான நீதி செய்திருக்கிறேன்’ என்றார்.
இயக்குனர் ஆனந்த் வி.பிரசாத் கூறுகையில், ‘இன்றைய இளைஞர்களில் பலர் நல்ல வருமானம் தரக்கூடிய தொழில்கள், வேலைவாய்ப்புகளை பெறுவதிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாக ராணுவ பணியில் சேரும் ஆர்வம் ஓரளவு குறைந்து வருவதை நம்மால் காண முடிகிறது. இப்படத்தின் மூலம் ஈர்க்கப்பட்டு, குறைந்தபட்சம் 1000 இளைஞர்களாவது ராணுவத்தில் சேர்வார்கள் என்று நம்புகிறோம்’ என்றார்.