×

‘பத்து தல’ படத்திற்கு நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு... விளக்கமளித்த திரையரங்கு நிர்வாகம்... கொந்தளிக்கும் நெட்டிசன் !

 

சிம்புவின் ‘பத்து தல’ படத்தை பார்க்க நரிக்குறவர்களுக்கு அனுமதி வழங்காத விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. 

சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியானது. இதையொட்டி காலை முதலே ஏராளமான ரசிகர்கள் திரையரங்கு வாயில்களில் குவிந்தனர். அந்த வகையில் சென்னை ரோகினி திரையரங்கிற்கு ‘பத்து தல’ படத்தை பார்க்க நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த இரண்டு பெண்களுடன், ஒரு சிறுவனும் வந்தனர். 

டிக்கெட்டுடன் வந்த அவர்களை முதலில் உள்ளே விட அனுமதி மறுத்துள்ளனர். அதன்பிறகு சிறிது நேரம் அவர்களை உள்ளே விட்டுள்ளனர். இது குறித்து வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள ரோகினி திரையரங்கம், சாதிய பாகுபாடு காரணமாக உள்ளே அனுமதிக்க மறுக்கவில்லை. இது யுஏ படம் என்ற காரணத்தால் குழந்தைகளுடன் வந்த அவர்களை தடுத்தோம் என்று கூறியுள்ளார். 

இருப்பினும் ரோகினி திரையரங்கிற்கு எதிராக கருத்துக்களை நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது , எனினும் முதலில் அனுமதிக்க மறுத்தததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது என்று குறிப்பிட்டுள்ளார்.