×

சம்பள மோசடியில் சிக்கிய ‘ருத்ரன்’ திரைப்படம் – காவல் நிலையத்தில் புகார்.

 

பைவ்ஸ்டார் கதிரேசன் இயக்கி, தயாரித்த திரைப்படம் ‘ருத்ரன்’. இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகை பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்திருந்தனர். கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள்  மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த நிலையில் படத்தின் பாடலுக்கு ஆடிய நடன கலைஞர்களுக்கு சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பதாக கூறி சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரை நடன அமைப்பாளர் ராஜ் என்பவர் கொடுத்துள்ளார். அதில், “ படத்தின் கிளைமாக்ஸ் பாடலுக்கு நடனமாட துணைநடிகர்கள் மற்றும் நடன கலைஞர்களை ஏற்பாடு செய்து கொடுத்தேன்.  சூட்டிங் முடிந்து பல நாட்கள் ஆகியும் அவர்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை. இது குறித்து ஏஜென்ட் ஸ்ரீதர் என்பவரிடம் கேட்டதற்கு இதோ அதோ என இழுத்தடித்தார்.

இது குறித்து திரைப்படத்தின் மேலாளரிடம் பேசினேன் அவர் கடுமையாக நடந்துகொண்டார். தொடர்ந்து பெப்சி அலுவலகத்திலும் புகார் கொடுத்தேன் ஆனால் எந்த பலனும் இல்லை.  10 நாட்கள் உழைத்த நடன கலைஞர்களுக்கு அதற்கான சபளத்தை வழங்காமல் இழுத்தடித்து வரும் ஸ்ரீதர் மற்றும் மேனேஜர் மீது தக்க நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுதர வேண்டும்” என அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.