×

திட்டமிட்டபடி வெளியாகும் 'ருத்ரன்'... தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவு !

 

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'ருத்ரன்' படத்தின் மீதான தடையை நீதிமன்றம் நீக்கியுள்ளது. 

பிரபல தயாரிப்பாளர் 'ஃபைவ் ஸ்டார்' கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ருத்ரன்'. ஃபைவ் ஸ்டார் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த படத்தின் வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை 12 கோடியே 25 லட்சத்திற்கு ரெவன்சா குளோபல் வென்சர்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது.  இதற்காக முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் பணம் அந்நிறுவனம் தயாரிப்பு நிறுவனத்திடம் கொடுத்தது.  திடீரென கூடுதலாக 4 கோடியே 50 லட்சம் தரவேண்டும் என்று கூறி அந்த நிறுவனத்திடம் போடப்பட்ட ஒப்பந்தத்தை தயாரிப்பு நிறுவனம் ரத்து செய்ததது. 

இதனால் அதிருப்தியடைந்த அந்த நிறுவனம், திட்டமிட்டபடி படத்தை வெளியிட அனுமதித்தால் தங்களுக்கு 10 கோடி நஷ்டம் ஏற்படும் என்பதால் படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என ரெவன்ஸா குளோபல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிமன்றம், ஏப்ரல் 24-ஆம் தேதி வரை படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது.

இந்நிலையில் இந்த வழக்கு அவசரமாக இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், படத்தின் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டது. இந்தி டப்பிங் உள்ளிட்ட பிறமொழிக்கான உரிமை கொடுப்பது குறித்து எந்த முடிவும் எடுக்க மாட்டோம் என்ற உத்தரவாதம் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால் நாளை திட்டமிட்டபடி இப்படம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.  ‌