×

மிரட்டலான போலீசாகும் ரஜினிகாந்த்... 'தலைவர் 170' குறித்து அசத்தலான அப்டேட். 

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்த படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். ஜெயில் கதைக்களம் கொண்ட இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்பெற்ற ஜெயிலராக நடித்து வருகிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த படத்திற்குப் பிறகு ரஜினியின் 170 வது படத்தை யார் இயக்குவார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. முதலில் சிவகார்த்திகேயனின் 'டான்' படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்குவர் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் சொன்ன கதை ரஜினிக்கு திருப்தியில்லாததால் படத்திலிருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு 'லவ் டுடே' இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் பெயரும் அடிப்பட்டது. 

இறுதியாக சூர்யாவின் 'ஜெய் பீம்' படத்தை இயக்கி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற டி.ஜே.ஞானவேல் ரஜினியின் படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ரஜினியை சந்தித்த டிஜே ஞானவேல் ஒரு கதையை சொன்னதாகவும், அந்த கதை ரஜினிக்கு பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளதாம். அந்த படத்தில் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிக்கவுள்ளார். ஏற்கனவே 'தர்பார்' படத்தில் மும்பை போலீஸ் கமிஷனராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  ‌