×

சரத்குமார் - விதார்த் இணைந்து நடிக்கும் புதிய படம்... சமூக பிரச்சனையை பேசும் ‘சமரன்’ !

 

நடிகர் சரத்குமார் மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.  

வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் விதார்த். அவரது நடிப்பில் தற்போது ‘சமரன்’ என்ற படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த படத்தில் விதார்த்துடன் இணைந்து சரத்குமாருக்கும் நடிக்கிறார். இவர்களுடன் மலையாள நடிகர் ஆ.நந்தா, சிங்கம் புலி, ஜார்ஜ், சித்திக், கும்கி அஸ்வின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

புலிப்பார்வை, ஆறாம் திணை உள்ளிட்ட படங்களில் படத்தொகுப்பாளராக பிரபல எடிட்டர் திருமலை பாலுச்சாமி, இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். வேத் சங்கர் சுகவனம் இசையமைக்கும் இந்த படத்திற்கு குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். எம்360° ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த படத்தில் நடிகர் சரத்குமார் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சேர்மனாகவும், விதார்த் ராணுவ அதிகாரியாகவும் நடிக்கின்றனர். இந்த படத்திற்காக மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை மணலியில் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.