×

ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய சரவணன் 'தி லெஜன்ட்' ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு !

 
 ‘தி லெஜண்ட்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகிய இரு இயக்குனர்கள் இணைந்து இயக்கிய திரைப்படம் ‘தி லெஜண்ட்’. இந்த படத்தில் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளரான அருள் சரவணன், கதாநாயகனாக நடித்திருந்தார். சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. 

இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்திருந்தார். இவர்களுடன் நடிகர்கள் பிரபு, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அறிவியல் சார்ந்து உருவான இந்த படத்தில் விஞ்ஞானியாக அருள் சரவணன் நடித்திருந்தார்.  எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் கடந்த ஜூலை 28-ஆம் தேதி வெளியானது. 

ஆனால் இந்த படம் வெளியாகி போதிய வெற்றியை பெறவில்லை. ஆனாலும் இப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இதையடுத்து சமீபத்தில் இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என லெஜன்ட் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வரும் மார்ச் 3-ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.