‘மாவீரன்’ இயக்குனருடன் பிரச்சனையா ?.. மௌனம் கலைத்த சிவகார்த்திகேயன் !
‘மாவீரன்’ படத்தில் தனது பகுதி படப்பிடிப்பு நிறைவுபெற்றுவிட்டதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாவீரன்’. இந்த படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்து வருகிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள ‘1947 ஆகஸ்ட் 16’ படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ‘மாவீரன்’ படத்தின் தனது பகுதி படப்பிடிப்பு நிறைவுபெற்று விட்டது. இன்னும் சில நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுபெற்று விடும். அடுத்து கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளேன். ‘அயலான்’ திரைப்படம் இந்த வருடம் இறுதிக்குள் வெளியாகும். அதற்கான கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. ‘மாவீரன்’ திரைப்படம் தான் முதலில் ரிலீசாக உள்ளது. ‘மாவீரன்’ இயக்குனர் மடோன் அஸ்வினுடன் முரண்பாடு ஏற்பட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்தார்.