×

படப்பிடிப்பிற்காக தனி விமானத்தில் பறந்த நடிகர் விஜய்... காஷ்மீர் படப்பிடிப்பு குறித்து முக்கிய அப்டேட்

 

 ‘தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினர் தனி விமானத்தில் காஷ்மீர் சென்றுள்ளனர். 

‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார். லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. ‘தளபதி 67’ என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். 

மனோஜ் பரம்மஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். அன்பறிவு சகோதரர்கள் இப்படத்திற்கு சண்டைப்பயிற்சி அளிக்கின்றனர். இந்த படத்தின் நடிகர், நடிகைகள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நடிகைகள் திரிஷா, பிரியா ஆனந்த் ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது. அதேபோன்று நடிகர்கள் சஞ்சய் தத், கெளதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2-ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. இதையடுத்து இயக்குனர் மிஷ்கின் நடிக்கும் காட்சிகள் கொடைக்கானலில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை காஷ்மீரில் தொடங்கவுள்ளது. இதற்காக நடிகர் விஜய் தனி விமானம் மூலம் இன்று காலை காஷ்மீர் சென்றார். விஜய்யுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், திரிஷா, தயாரிப்பாளர் லலித் உள்ளிட்ட படக்குழுவினரும் சென்றுள்ளனர். இதற்கிடையே இப்படத்தின் டைட்டில் ப்ரோமோ வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.