×

‘தி கேரளா ஸ்டோரி’-க்கு தமிழகத்தில் வரவேற்பு இல்லை - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் !

 

‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தமிழகத்தில் வரவேற்பு இல்லாததால் திரையரங்கில் இருந்து தூக்கப்பட்டதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. கேரளாவை சேர்ந்த அப்பாவி பெண்கள் மூளைச்சலவை செய்து இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி, ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்பிற்கு அனுப்பப்படுகின்றனர்‌. கேரளாவில் மட்டும் இதுபோன்று 32 ஆயிரம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இந்த படத்தின் கதை. 

இந்தியாவில் இந்த படத்திற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பும், மற்றொரு பிரிவினர் ஆதரவும் தெரிவித்துள்ளனர். இந்த படத்திற்கு மேற்கு வங்கம் மாநிலம் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் இப்படத்திற்கு வரவேற்பு இல்லாததால் திரையரங்கு உரிமையாளர்கள் வெளியிட்ட ஒரே நாளில் தூக்கிவிட்டனர். 

மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் தடை விதித்ததை எதிர்த்து அப்படத்தின் தயாரிப்பாளர் சார்பில் உச்சநீதிமன்றததில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மேற்கு வங்க மாநிலத்திற்கு நோட்டீஸ் வழங்கியது. அதேபோன்று தமிழகத்தில் திரையரங்குகள் தாக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. 

இந்நிலையில் நேற்று தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை தமிழக அரசு தடை செய்யவில்லை. மாநிலம் முழுவதும் 19 திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு போலீஸ் பாதுபாப்பும் வழங்கப்பட்டது. ஆனால் இப்படத்திற்கு போதிய வரவேற்பு இல்லாதால் திரையரங்கு உரிமையாளர்களே படத்தை திரையரங்குகளில் திரையிடவில்லை. இதில் தமிழக அரசின் தலையீடு எதுவும் இல்லை என்று தெரிவித்தக்கப்பட்டுள்ளது.