×

மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் - த்ரிஷா பதில்

 

நடிகை த்ரிஷா குறித்து நாகரீகமற்ற முறையில் பேசியதற்காக நடிகர் மன்சூர் அலிகான் மீது நடிகை த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகைகள் மாளவிகா மோகனன், குஷ்பு, ரோஜா என பலரும் தங்களது எதிர்பையும் கண்டனத்தையும் பதிவு செய்து வரும் நிலையில் நேற்று தென்னிந்திய நடிகர் சங்கமும் தனது எதிர்பை பதிவு செய்து அறிக்கை வெளியிட்டிருந்தது. தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது. மன்சூரின் இந்த அநாகரீகமான பேச்சுக்கு அவர் மீது வழக்கு பதிவு செய்ய  டிஜிபிக்கு மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடரப்பட்டது. மன்சூர் அலிகான் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியது தொடர்பாக திரிஷா தரப்பிடம் விளக்கம் கேட்டு ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் அவருக்கு கடிதம் அனுப்பியது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகை த்ரிஷா எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

இதற்கு பதில் அளித்துள்ள நடிகை த்ரிஷா, மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். நடிகர் மன்சூர் மன்னிப்பு கேட்டதை அடுத்து, நடிகை த்ரிஷா அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என வலியுறுத்தி இருக்கிறார். இதனால், இப்பிரச்சனை இதனுடன் முடிந்தது என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.