×

கனவுலகில் வாழ வைத்த ரஞ்சித்திற்கு நன்றி - 'தங்கலான்' நிறைவு குறித்து விக்ரம் நெகிழ்ச்சி !

 

'தங்கலான்' என்ற கனவுலகில் வாழ வைத்ததற்கு நன்றி என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார் ‌. 

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘தங்கலான்‘. ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாராகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். வித்தியாசமான கதைக்களத்துடன் முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. 

 

ப்ரீயட் படமாக உருவாகும் இந்த படம் உண்மை சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது. சுதந்திரத்திற்கு முந்தைய 18-ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகி வெளியாகவிருக்கிறது. 

இந்த படத்தில் நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் பார்வதி மற்றும் பசுபதி ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடப்பா, சென்னை உள்ளிட்ட இடங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வந்தது. கடைசியாக இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. இதில் விக்ரம், மாளவிகா மோகனன் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள நடிகர் விக்ரம், இது ஒரு அருமையான பயணம். அற்புதமான பலருடன் இந்த படத்தில் பணியாற்றியுள்ளேன். ஒரு நடிகனாக பல அனுபவங்களை பெற்றேன். இந்த படத்திற்காக 118 நாட்கள் பணியாற்றியது மறக்க முடியாதவை. இந்த கனவு வாழ்க்கையை தந்த ரஞ்சித்திற்கு நன்றி. 'தங்கலான்' வரும் நாட்களுக்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.