×

யோகி காலில் விழுந்தது ஏன் ?...  சர்ச்சைக்கு விளக்கமளித்தார் நடிகர் ரஜினிகாந்த் !

 

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காலில் விழுந்ததது சர்ச்சைக்குள்ளான நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார். 

‘ஜெயிலர்’ படத்தை முடித்த நடிகர் ரஜினிகாந்த், நேரடியாக இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டார். அங்கு முக்கிய ஆன்மீக தலங்களுக்கு சென்று வழிப்பட்ட பின்னர் உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் முக்கிய பிரபலங்களை சந்தித்து வருகிறார். முதலில் உபி துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மவுரியாவுடன் இணைந்து ‘ஜெயிலர்’ படத்தை பார்த்தார். 

அதன்பிறகு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை ரஜினிகாந்த் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது யோகியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது ஆன்மீக பயணங்களை நிறைவு செய்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். 

இதையடுத்து விமானத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், யோகி காலில் விழுந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், என்னை விட வயது குறைவாக இருந்தாலும் சந்நியாசி காலில் விழுவது என்னுடைய வழக்கம். அதைத்தான் செய்தேன் என்று கூறினார். மேலும் பேசிய அவர், ‘ஜெயிலர்’ படத்தை வெற்றிப் படமாக்கிய தமிழ் ரசிகர்களுக்கு நன்றி. மீண்டும் நெல்சன் இயக்கத்தில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு இப்போதுதான் வந்திருக்கிறேன் என்று கூறி கிளம்பி சென்றார்.