×

காலத்தால் அழியாத கலைப்பொக்கிஷங்களின் கதாநாயகர்… இயக்குனர் மகேந்திரன் பிறந்தநாள் சிறப்புப் பதிவு !

இயக்குனர் மகேந்திரன் அவர்கள் பிறந்தநாள் இன்று! அவருடைய இயக்கத்தில் வெளிவந்த முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே போன்ற படங்கள் காலத்தால் அழியாத படங்களின் பட்டியலில் என்றும் இருக்கும் என்பதே இவரின் சிறப்பு. தன்னுடைய படங்களில் நடைமுறை வாழ்க்கையில் நிகழும் உண்மைகளை பார்ப்பவர்களின் உள்ளத்தை தொடும் அளவிற்கு தங்கள் சொந்த அனுபவம் போல உணரச்செய்ததே இவருடைய பாணி. திரைப்பட இயக்குனராவதற்கு முன் திரைக்கதை ஆசிரியராக பல்லாண்டுகள் பணியாற்றினார். இயக்குனர் மகேந்திரனின் இயற்பெயர் அலெக்சாண்டர் . இளையான்குடியில் ஜீலை
 

இயக்குனர் மகேந்திரன் அவர்கள் பிறந்தநாள் இன்று!
அவருடைய இயக்கத்தில் வெளிவந்த முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே
போன்ற படங்கள் காலத்தால் அழியாத படங்களின் பட்டியலில் என்றும் இருக்கும் என்பதே
இவரின் சிறப்பு. தன்னுடைய படங்களில் நடைமுறை வாழ்க்கையில் நிகழும் உண்மைகளை
பார்ப்பவர்களின் உள்ளத்தை தொடும் அளவிற்கு தங்கள் சொந்த அனுபவம் போல உணரச்செய்ததே இவருடைய பாணி.
திரைப்பட இயக்குனராவதற்கு முன் திரைக்கதை ஆசிரியராக பல்லாண்டுகள் பணியாற்றினார். இயக்குனர் மகேந்திரனின் இயற்பெயர் அலெக்சாண்டர் . இளையான்குடியில்
ஜீலை 25 1939 ல் பிறந்தவர். பெரும்பாலும் திரைத்துறையில் இருப்பவர்கள் தங்களது நிஜப் பெயரை மாற்றி, வேறொரு பெயரை வைத்துக் கொள்வது வழக்கம். ஒரு சிலரே பெற்றோர் வைத்த இயற்பெயருடன் சினிமாவில் ஜெயித்துள்ளனர்.

இயக்குனர் மகேந்திரனுக்கு மகேந்திரன் என்று பெயர் வரக்காரணம் பள்ளி பருவ சீனியரான கே.மகேந்திரன் தான். காரணம் அவர் மிகச் சிறந்த விளையாட்டு வீரர். இயல்பாகவே விளையாட்டு வீரரான இயக்குனர் மகேந்திரன் தனது சீனியரின் மீது கொண்ட மரியாதை கலந்த பாசத்தால், தனது பெயரையும் மகேந்திரன் என மாற்றிக் கொண்டார் அலெக்சாண்டராக இருந்த மகேந்திரன். பின்னாளில் சினிமாவில் எவ்வளவோ உயரங்களைத் தொட்ட பிறகும், மகேந்திரன் என்ற பெயரையே தன் அடையாளமாக அவர் ஆக்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி படிப்பை முடித்தவுடன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இண்டர் மீடியட் படிப்பை முடித்து காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பொருளாதார படிப்பில் சேர்ந்தார். இந்த காலகட்டத்தில் கல்லூரியில் மேடை நாடகங்கள் நடத்துவதில்
ஆர்வத்துடன் இயங்கி வந்தார். ஒரு முறை கல்லூரி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் எம்ஜிஆர் கலந்து கொண்ட நேரத்தில் அவருக்கு முன்பாக மேடையில் பேசுவதற்கு மகேந்திரன் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.அந்த உரையில் திரைப்படங்களில் வியாபாரத்திற்காக செய்து கொள்ளும் தவறான சமரசங்கள் குறித்து கடுமையான விமர்சனத்தை வைத்தது எம்ஜிஆரை கவர்ந்தது. மேடையிலேயே மகேந்திரனை எம்ஜிஆர் மகேந்திரன் சிறந்த விமர்சகர் என்று பாராட்டினார். கல்லூரி படிப்பை முடித்த பின்னர் சட்ட படிப்பை கற்க சென்னை சென்றார். ஏழு மாதங்கள் கழித்து பொருளாதார சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாமல் சொந்த ஊருக்கு திரும்பினார்.அங்கே காரைக்குடி கண்ணப்ப வள்ளியப்பா என்பவர் நடத்திய இனமுழக்கம் பத்திரிகையில் பணியாற்றினார்.

பின்னர் சென்னைக்கு மீண்டும் திரும்பி துக்ளக் இதழில் இவர் பணியாற்றினார்
இந்த சமயத்தில் மீண்டும் எம்ஜிஆர் அவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்க
எம்ஜிஆர் இவரிடம் பொன்னியின் செல்வன் புதினத்தை திரைக்கதை அமைக்க கேட்டுக்கொண்டார். திரைப்படம் உருவாக்கும் பணிகள் தாமதமாக எம்ஜிஆர் மகேந்திரன் அவர்களை தனது நாடக குழுவிற்கு எழுதுவதற்கு வாய்ப்பு தந்தார்.
இந்த சமயத்தில் அனாதைகள் என்ற பெயரில் ஒரு திரைக்கதை எழுதியிருந்தார்.இந்த கதையை படித்த எம்ஜிஆர் திரைப்படமாக எடுக்க திட்டமிட்டு வாழ்வே வா என்று பெயரிட்டு
எம்ஜிஆர்,சாவித்திரி நடிப்பில் தயாரிக்க திட்டமிடப்பட்டது.ஆனால் சில நாட்களிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனால் இவருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் தான் நடித்து வந்த காஞ்சித்தலைவன் திரைப்படத்தில் உதவி இயக்குனராக வாய்பளித்தார்.
திரையுலகில் நுழைவதற்கு இடைப்பட்ட காலத்தில் எம்ஜிஆர் தொடர்ந்து இவருக்கு பண உதவி செய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.ஆனால் எம்ஜிஆர் நடிப்பில் எந்த படத்திற்கும் கதை வசனம் இயக்கம் அமைத்ததில்லை இயக்குனர் மகேந்திரன்.

1966 ஆம் ஆண்டு திரைக்கதை எழுதி திரையுலகில் அறிமுகமானார். நாம் மூவர் என்ற அந்த திரைப்படத்தில் ஜெய்சங்கர், நாகேஷ், பண்டரிபாய் நடித்திருந்தனர். தொடர்ந்து சபாஷ் தம்பி,செல்வி ஜெயலலிதா நடித்த பணக்காரப்பெண், பி . மாதவன் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த தங்கப்பதக்கம், எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் நடித்த ஆடு புலி ஆட்டம், போன்ற படங்களில் கதை வசனம் எழுதினார்.
இயக்கத்தில் முதல் படமாக 1978 ல்முள்ளும் மலரும் திரைப்படம் வெளிவந்தது. ரஜினிகாந்த் அவர்களுக்கு திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை திரைப்படமாக இந்த படம் அமைந்தது என்றால் மிகையாகாது.இந்த திரைப்படம் எழுத்தாளர் உமாசந்திரன் எழுதிய நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. அண்ணன் தங்கை பாசத்தின் அடிப்படையில் அமைந்த இந்த திரைப்படம் எடுக்கப்பட்ட காலத்தில் இயக்குனர் மகேந்திரன் பல்வேறு தடங்கல்கள் இடையூறுகளை சந்திக்க நேர்ந்தது.

கதாநாயகனாக ரஜினிகாந்த் அவர்களை ஒப்பந்தம் செய்ததில் தயாரிப்பாளருக்கு
விருப்பம் இல்லை.காரணம் அதற்கு முன் ரஜினிகாந்த் பல படங்களில்வில்லனாக நடித்ததால் கதாநாயகனாக சரிப்படமாட்டார் என்று தயாரிப்பாளர் நினைத்தாலும் இயக்குனர் மகேந்திரன்
தனது நிலையில் உறுதியாக இருந்து படத்தை எடுத்து வெளியிட்டார். படத்தை முடித்த பிறகு கூட கடைசி கட்ட காட்சிகள் எடுக்க தயாரிப்பாளர் ஒத்துழைக்காததால் நடிகர் கமல்ஹாசன் உதவியில் தான் படத்தை வெளியிட முடிந்தது. இந்த திரைப்படம் பின்னர் மலையாளத்தில் வேனலில் ஒரு மழை, இந்தியில் பியாரி மேக்னா, என்று வெளிவந்தது. நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு மாநில அரசின் விருதை பெற்றுத்தந்தது. இயக்குனர் மகேந்திரன் ஒரு பேட்டியில்
நடிகர் ரஜினிகாந்த் இல்லாமல் இந்த படத்தை தன்னால் எடுத்திருக்க முடியாது எனவும் அவரை தவிர்த்து வேறொருவரை அந்த கதாபாத்திரத்தில் தன்னால் நினைத்து பார்க்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

இயக்கத்தில் இரண்டாவது படமாக நடிகர் விஜயன் சரத்பாபு அஸ்வினி நடித்த 1979 ல் உதிரிப்பூக்கள் திரைப்படம் வெளிவந்தது. இதுவும் புதுமைப்பித்தனின் சிற்றன்னை
நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இந்த படத்தின் இறுதிக்காட்சி இன்றளவும் பேசப்படுகிறது. இயக்குனர் மணிரத்னம் அவர்களும் இந்த படத்திற்கு நிகராக எப்பொழுது நான் திரைப்படம் இயக்குகிறேனோ அப்போது தான் என்னை முழுமையான
இயக்குனராக உணர்வேன் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அந்த அளவுக்கு உதிரிப்பூக்கள் இன்றளவும் பேசப்படும் திரைப்படமாக உள்ளது.
அதற்கு பிறகு ரஜினிகாந்த் நடித்து இயக்குனர் ஐவி சசி இயக்கத்தில் வெளிவந்த காளி திரைப்படத்தில் எழுதிய பிறகு ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த ஜானி (1980) திரைப்படத்தை இயக்கினார். ரஜினி யின் இரட்டை வேடமும், நடிகை ஸ்ரீதேவி யின் பாடகி அர்ச்சனா கதாபாத்திரமும் இளையராஜா இசையில் அமைந்த பாடல்களும் இன்றளவும் ஒரு கிளாசிக் திரைப்படமாக பேசப்படுகிறது.

ஐந்தாவது திரைப்படமாக ஜானி திரைப்படம் வெளிவந்து சில மாதங்களில் இயக்குனர்
மகேந்திரன் இயக்கத்தில் 1980 ல் நெஞ்சத்தை கிள்ளாதே திரைப்படம் வெளிவந்தது. நடிகை சுஹாசினி, நடிகர் பிரதாப்,நடிகர் மோகன், ஆகியோருக்கிடையான முக்கோண காதல் கதையாக அமைந்த இந்த படத்தின் மூலம் தான் அதுவரை ஒளிப்பதிவாளர் அசோக்குமாரிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்த சுஹாசினி கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் மூன்று தேசிய விருதுகளை பெற்றது. (சிறந்த படம், சிறந்த ஒளிப்பதிவு உட்பட)
தொடர்ந்து நண்டு , மெட்டி, பூட்டாத பூட்டுகள், கை கொடுக்கும் கை ,கண்ணுக்கு மை எழுது
என்று குடும்பம் அதில் நிகழும் பாசப் பிணைப்புகள், சங்கடங்கள், ஆகியவை உள்ளடக்கிய குடும்பப் படங்களை இயக்கினார். இதில் மெட்டி திரைப்படம் குறிப்பிடத்தக்க
திரைப்படமாக இன்றளவும் போற்றப்படுகிறது.
கடைசி திரைப்படமாக நடிகர் அரவிந்த்சாமி, நடிகைகள் கௌதமி, ரஞ்சிதா நடித்த சாசனம் வெளிவந்தது. இந்திய அரசின் என்எஃப்டிசி நிறுவன தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திருமணமான தம்பதிகளுக்கு இடையிலான வாழ்க்கையில் மற்றொரு பெண் நுழைந்த போது ஏற்படும் பிரச்சினைகளை கூறியது.

சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் ஆகியோரின் வெற்றிப் படங்களுக்கு மகேந்திரன் உரையாடல் எழுதியுள்ளார். ரஜினியை வைத்து மூன்று படங்கள் இயக்கியுள்ளார். இவரது படங்களில் அதிகம் நடித்தவரும் அவரே. மகேந்திரனின் முதல் படம் துவங்கி, அவரது பல படங்களில் சரத்பாபு இடம் பெற்றார். கன்னட நடிகை அஸ்வினியைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் மகேந்திரன். பேபி அஞ்சுவும் மகேந்திரனின் அறிமுகமே.
கமலஹாசனின் அண்ணா சாருஹாசனைத் திரையுலகுக்கு உதிரிப் பூக்கள் படத்தின் வாயிலாக அறிமுகம் செய்து வைத்தார் மகேந்திரன். மிகச் சிறந்த நடிப்பை வழங்கிய சாருஹாசன், பின்னர் ஒரு கன்னடப் படத்திற்காக மிகச் சிறந்த நடிகருக்கான அனைத்திந்திய விருதினைப் பெற்றார்.
விஜயனை அறிமுகம் செய்தது இயக்குநர் பாரதிராஜா எனினும், அவருக்கு மறக்க இயலாத ஒரு வேடத்தை உதிரிப் பூக்களில் அளித்து, திரையுலகில் அவரைக் கதாநாயகனாக உயர்த்தியவர் மகேந்திரன். இதைத் தொடர்ந்து, பல படங்களில் விஜயன் கதாநாயகனாக நடித்தார்.
மகேந்திரனின் மிகச் சிறப்பான அறிமுகம் சுஹாசினி. நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படத்தில் நடிப்பாற்றலுக்காக எதிர்பார்க்கப்பட்ட தேசிய விருதை சுஹாசினி இழந்தார். (பின்னர் ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் சிந்து பைரவி திரைப்படத்திற்காக இவ்விருதினை அவர் பெற்றார்) முள்ளும் மலரும் திரைப்படத்தில் நடிக்கவில்லை என்றாலும், அதில் ஒளிப்பதிவாளராக பாலு மகேந்திரா பணி புரிய மிகவும் உதவியவர் கமலஹாசன் என்றும் மகேந்திரன் குறிப்பிட்டதுண்டு. ஆயினும், மகேந்திரன் இயக்கத்தில் கமல் நடித்ததில்லை.

இயக்குனர் மகேந்திரன் சினிமாவும் நானும் என்னும் நூலினை எழுதி இந்த நூல் 2004ஆம் ஆண்டு வெளியானது. கடைசி காலத்தில் பல திரைப்படங்களில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தும் உள்ளார். குறிப்பாக காமராஜர் திரைப்படத்தில் திராவிட தலைவர் க.ராஜாராம் வேடத்தில் நடித்து அறிமுகமானார். நடிகர் விஜய் நடித்த தெறி, ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.
-@ShivakkumarTD