×

குஷ்பு… எதிர்ப்புகளில் வளர்ந்த நாயகி! #HBD_Kushboo

தமிழ் சினிமாவில் வட இந்திய நாயகிகளின் வரவுகள் நடப்பது வழக்கமானதுதான். அதுபோலத்தான் தமிழகத்திற்கு வந்தவர் குஷ்பு. ’தர்மத்தின் தலைவன்’ படத்தில் இரு நாயகிகளில் ஒருவர். குறும்புத் தனமான பாத்திரம். ஆனால், வருஷம் 16 படம்தான் ரசிகர்களிடையே ஓர் அறிமுகத்தைத் தந்தது. அடுத்தடுத்து, வெற்றி விழா, கிழக்கு வாசல், நடிகன் தொடர்ந்து வெற்றிப்படங்களின் நாயகியாக வலம் வந்தவர். 1991-ல் வெளியான ’சின்ன தம்பி’ படம் குஷ்புவை ஒரு பாப்புலர் ஹீரோக்கு இணையான புகழைப் பெற வைத்தது. இந்த இடம்
 

தமிழ் சினிமாவில் வட இந்திய நாயகிகளின் வரவுகள் நடப்பது வழக்கமானதுதான். அதுபோலத்தான் தமிழகத்திற்கு வந்தவர் குஷ்பு. ’தர்மத்தின் தலைவன்’ படத்தில் இரு நாயகிகளில் ஒருவர். குறும்புத் தனமான பாத்திரம். ஆனால், வருஷம் 16 படம்தான் ரசிகர்களிடையே ஓர் அறிமுகத்தைத் தந்தது. அடுத்தடுத்து, வெற்றி விழா, கிழக்கு வாசல், நடிகன் தொடர்ந்து வெற்றிப்படங்களின் நாயகியாக வலம் வந்தவர்.

1991-ல் வெளியான ’சின்ன தம்பி’ படம் குஷ்புவை ஒரு பாப்புலர் ஹீரோக்கு இணையான புகழைப் பெற வைத்தது. இந்த இடம் அவர் தமிழில் நடிக்க வந்த மூன்றே வருடத்தில் நடந்தது. அதன்பின், தமிழில் அவரின் கால்ஷீட்டுக்காகக் காத்து கிடந்தார்கள். உச்சநட்சத்திரங்களாகத் திகழ்ந்த ரஜினி, கமல், விஜய்காந்த் உள்ளிட்டோர் குஷ்புவை தங்கள் படங்களில் நாயகியாக்கினார்கள். அவருடன் இணையாக நடிக்காத நாயகர்களே இல்லை எனுமளவு நடித்தார்.

1998 முதல் 2000 வரை குஷ்பு உச்சநட்சத்திர நாயகிகாக வலம்வந்தார். ரசிகர்கள் அவருக்குக் கோவில் கட்டினார்கள் எனும் ஒரு செய்தியே போதும் அவரின் புகழ் விரிந்திருந்ததைச் சொல்ல. அதன்பின் தொலைக்காட்சி சீரியல்களிலும், தொகுப்பாளராகவும் களம் இறங்கினார். அதற்கு அடுத்து அரசியலிலும்.

விமர்சனங்களைக் கண்டு அஞ்சாது துணிவோடு எதிர்கொள்ளும் வழக்கம் உள்ளவர். திரைத்துறையில் அவரைப் பற்றிய கிசுகிசுக்களால் தனது கரியரை ஒருபோதும் தடுமாறச் செய்துகொண்டவர் அல்ல. தற்போது அதே குணமே அரசியலில் ஈடுபடும்போதும் அவரிடம் இருக்கிறது.

பிறப்பால் இஸ்லாமியராக குஷ்பு இருந்தாலும், தந்தை பெரியாரின் தாக்கம் தன்னிடம் இருப்பதாக வெளிப்படையாகச் சொன்னவர். பலரும் தயங்கிய மணியம்மை கதாபாத்திரத்தில் நடித்தவர். சரியாகச் சொன்னல், அப்பாத்திரத்திற்கு உயிர் தந்தவர். பின்னாளில் அந்தப் பாத்திரப் பெயரே அவரைப் பற்றி அவதூறு செய்ய பயன்பட்டாலும், அதற்காக ஒருபோதும் கலங்காதவர். எப்போது தன்னை பெரியார்வாதி என்று சொல்லிக்கொள்பவர்.

துணிச்சலான கருத்துக்களைச் சொல்வதோடு எதிர்ப்பு கண்டு அதில் பின்வாங்கியதில்லை. செக்ஸ் பற்றி இவர் இதழில் பேசிய கருத்துக்கு பல இடங்களில் எதிர்வினைகள் வந்தன. இன்னொரு பிரச்னைக்குப் பல்வேறு ஊர்களில் வழக்குகள் பதிவு செய்தாலும் துணிவோடு எதிர்கொண்டவர்.

திமுகவில் குஷ்பு 2010 ஆம் ஆண்டு சேர்ந்தார். அடுத்த ஆண்டில் வந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் சென்று திமுகவுக்காக வாக்குகள் சேகரித்தார். திமுக தலைவராக அப்போது இருந்த கருணாநிதி பாராட்டும்படி மேடைகளில் பேசினார்.

சில ஆண்டுகள் கழித்து, திமுகவின் அடுத்த தலைவர் யார் என்று கேள்விக்கு ஓர் இதழில் குஷ்பு அளித்த பதில் சர்ச்சையைக் கிளப்பியது. அவர் வீடு தாக்கப்பட்டது. திமுகவில் இருந்து அவர் வெளியேறினார். ஆனால், அப்போதும் திமுக மீது எவ்வித விமர்சனத்தையும் அவர் முன்வைக்க வில்லை.

தற்போது காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகப் பொறுப்பு வகிக்கிறார். விரைவில் பாஜக வில் சேர்வார் என்றும் யூகங்கள் வெளியாகின்றன.

பாஜக தரப்பிலிருந்தும் குஷ்புக்கு வெளிப்படையாகவே அழைப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. எல்லோருக்கும் தெரிந்த முகம், மேடையில் தெளிவாக, துணிவாகப் பேசும் குணம் உள்ளிட்டவற்றால் குஷ்புவின் வருகை தமிழக பாஜகவைப் பலப்படுத்தும் என்று நம்புகிறது.

98 -ல் தமிழகத்திற்கு குஷ்பு வந்ததிலிருந்து இடைபட்ட 32 ஆண்டுகளில் எத்தனையோ நாயகிகள் வந்துசென்றுவிட்டனர். ஆனால், சினிமா, டிவி, அரசியல் என ஒவ்வொன்றாகக் காலத்திற்கு ஏற்ப தன்னைப் புகுத்திக்கொள்வதில் குஷ்புக்கு நிகராக யாரையும் சொல்லி விட முடியாது.

இன்று குஷ்புவின் பிறந்த நாள். தன் மீதான விமர்சனங்களையே உரமாக்கி அடுத்த கட்டமாகப் பாய்ச்சலுக்குப் பயன்படுத்திக்கொள்ளும் குஷ்புவின் அடுத்த கட்டம் அவர் மட்டுமே அறிவார்.