×

ஆபாச மெசேஜ் அனுப்புகிறார் தினேஷ்.. போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்த ரக்ஷிதா !

 

தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்புவதாக கணவர் தினேஷ் மீது சீரியல் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். 

சினிமாவில் சில திரைப்படங்கள் நடித்துள்ள ரக்ஷிதா மகாலட்சுமி,  முதன்முதலில் ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் கால்தடம் பதித்தார். அதன்பிறகு  விஜய் டிவியில் ரொம்பவே பிரபலமான சரவணன் மீனாட்சி சீரியலில் இரண்டாம் சீசனில் நடித்தார். இந்த சீரியலில் நடித்த ரக்ஷிதாவுக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. 

பின்னர் இளவரசி, நாச்சியார், நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல் நடித்து புகழ்பெற்றார். சீரியல்கள் மட்டுமல்லாமல்  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்டு மிஸ்சஸ் கில்லாடி, ஜூனியர் சீனியர் ஆகிய சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு ஜொலித்தார்.

இதற்கிடையே தன்னுடன் ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியலில் நடித்த சக நடிகர் தினேஷ் என்பவருடன் நட்பாக பழகி வந்த நிலையில் பின்னாளில் அது காதலாக மாறியது. இதையடுத்து கடந்த 2013-ஆம் ஆண்டுகள் இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்களுள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். 

இந்நிலையில் தனது செல்போனுக்கு இரவு நேரத்தில் ஆபாசமாக மெசேஜ் அனுப்புவதாகவும், மிரட்டல் விடுவதாகவும் கூறி சென்னை மாங்காடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை ரக்ஷிதா கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்நிலையத்தில் ஆஜரான தினேஷ், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நடிகை ரக்ஷிதா நாடிக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். இது குறித்து இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.