×

திருமணம் குறித்து யோசிக்கவில்லை - தென்றல் சீரியல் நடிகை பளீர் !

 

தனது திருமணம் குறித்து இன்னும் யோசிக்கவில்லை என சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ் தெரிவித்துள்ளார். 

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் ஸ்ருதி ராஜ். மலையாளத்தில் கடந்த 1995-ஆம் ஆண்டு வெளியான 'அக்ரஜன்' என்ற படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் அறிமுகமானார். தமிழில் விஜய் நடிப்பில் வெளியான 'மாண்புமிகு மாணவன்' படத்தின் மூலம் அறிமுகமானார். கடைசியாக கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான 'இயக்கம்' என்ற படத்தில் நடித்திருந்தார். 

சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் சின்னத்திரை பக்கம் வந்தார். சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான 'தென்றல்' முலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். தன்னுடைய முதல் சீரியலிலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். அதன்பிறகு திருமதி செல்வம், அழகு, ஆபிஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். தற்போது தாலாட்டு சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. 

சீரியலை தாண்டி சூப்பர் சமையல், மாத்தியோசி, வணக்கம் தமிழா உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இதற்கிடையே நடிகை ஸ்ருதி ராஜ் திருமணம் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் சமூக வலைத்தளம் வாயிலாக கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு பதிலளித்துள்ள அவர், எந்த விஷயத்தையும் திட்டமிட்டு செய்வது கிடையாது. அப்படி திட்டமிட்டு செய்தாலும் அது சரி வராது. அதனால் என்னுடைய திருமணம் குறித்து நான் யோசிக்கவில்லை. அதை என்னுடைய பெற்றோர் பார்த்துக் கொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.  40 வயதாகும் நடிகை ஸ்ருதி ராஜ் கூறிய இந்த பதில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.