“இப்பெயரை மறக்காது கல்வியின் வரலாறு.”… சூர்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் சீனு ராமசாமி!
நீட் தேர்வு அறிவிப்பு வெளியான பின் தேர்வு குறித்த அச்சத்தால் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரது மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதையடுத்து பெரும்பாலான மக்கள் நீட் தேர்வை எதிர்த்து அரசை சாடி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் சூர்யா நேற்று நீட் தேர்வு குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில்
“கரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து ‘வீடியோ கான்பிரன்ஸிங்’ மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது.
நீட் போன்ற ‘மனுநீதி’ தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது. மகாபாரத காலத்து துரோணர்கள் ஏகலைவன்களிடம் கட்டை விரலை மட்டுமே காணிக்கையாகக் கேட்டார்கள். நவீனகால துரோணர்கள் முன்னெச்சரிக்கையுடன் ஆறாம் வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இதையெல்லாம் கடந்து படித்து முன்னேறுகிறவர்களை ‘பலியிட’ நீட் போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள்.” உள்ளிட்ட கருத்துக்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
இந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. இதுகுறித்து பலரும் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தற்போது இயக்குனர் சீனு ராமசாமி சூர்யாவின் கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
“கற்கும் வாய்ப்பில்
கல்வியில் சமமில்லை எனவே இங்கே கேள்வித்தாள்கள் கேள்விக்குறியாகிறது
சமமான கல்வி போதித்தல்
தர்மமாகும்
கல்வி தேர்தல் போல்
சமமாகட்டும் அதன் பிறகு
தேர்வுகள் எங்களை கண்டு அஞ்சும்
“அகரம்” சூர்யா
என்பேன் உம்மை. சூர்யா
இப்பெயரை மறக்காது
கல்வியின்
வரலாறு.” என்று தெரிவித்துள்ளார்.