ஒரே நேரத்தில் இருமொழிகளில் ரீமேக்காகும் சிம்புவின் 'மாநாடு'... விரைவில் வெளியாகும் அறிவிப்பு !

இந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் சிம்புவின் 'மாநாடு' திரைப்படம் ரீமேக்காக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'மாநாடு' திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாகியாக நடித்திருந்தார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
எஸ்ஜே சூர்யா வில்லனாக மிரட்டியிருந்தார். டைம் லூப் கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சிம்புவுக்கு சிறந்த கம்பேக் படமாக அமைந்தது மாநாடு.
இந்நிலையில் இப்படம் இந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரீமேக்கவுள்ளது. முதலில் இந்தியில் வருண் தவான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. தற்போது அவர் இணையாததால் அதற்கு பதிலாக நடிகர் ராணா இந்தியில் நடிக்கவுள்ளாராம். அதேபோல் தெலுங்கில் ரவிதேஜா ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். இந்த படத்தை ராணாவின் தந்தையின் நிறுவனமான சுரேஷ் பிரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.