உருவாகிறது ’த்ரிஷ்யம் 2’ – தனது பிறந்தநாளையொட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் மோகன்லால்..
2013-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால்- மீனா நடிப்பில் வெளியான படம் த்ரிஷ்யம். மலையாளத்தில் பிரமாண்ட வெற்றி பெற்ற இந்தப் படம் தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பாபநாசம்’ படத்தில் கமல்ஹாசன் – கௌதமி நடித்திருந்தனர். அதுமட்டுமின்றி சீன மொழியிலும் ரிமேக் செய்யப்பட முதல் இந்தியப் படம் என்ற பெருமையும் திரிஷ்யம் படத்தைச் சேரும்.
க்ரைம் திரில்லர் பாணி கதையம்சம் கொண்ட இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று தனது 60-வது பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகர் மோகன்லால் ”த்ரிஷ்யம் 2 ” உருவாக இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முதல் பாகத்தின் இறுதியில் தன் குடும்பத்தால் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரியின் மகனை புதிதாக கட்டப்பட்ட காவல்நிலையத்தின் அடியில் புதைத்து விட்டு திரும்புவார் மோகன்லால்.
அதை அந்த ஊருக்கு புதிதாக வரும் போலீஸ் அதிகாரி கண்டுபிடிக்கிறாரா என்பதே இரண்டாவது பாகமாக உருவாகும் என்று கூறப்படுகிறது. மேலும் முதல் பாகத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் இதிலும் நடிப்பார்கள் எனவும் இவர்களுடன் வேறு சிலரும் நடிப்பார்கள் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.
தற்போது ஜீத்து ஜோசப் – மோகன்லால் கூட்டணி இணைந்து ராம் என்ற படத்தில் பணிபுரிந்து வந்தனர். அந்தப் படத்தின் படப்பிடிப்பில் 50% வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த சூழல் சரியான பிறகே ‘ராம்’ படத்தின் மீதி படப்பிடிப்பு தொடங்கப்படும் என்பதால் அதற்குள் ‘த்ரிஷ்யம் 2’ படத்தை இயக்கும் முயற்சியில் ஜீத்து ஜோசப் இறங்கியுள்ளார். இப்படம் முழுவதும் கேரளாவிலேயே எடுக்கப்பட உள்ளதால் கேரள அரசு படப்பிடிப்புக்கு அனுமதியளித்தவுடன் இதன் படப்பிடிப்பு தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
#Drishyam #Drishyam2 pic.twitter.com/OHnue7P5uw
— Mohanlal (@Mohanlal) May 21, 2020