ரஜினியுடன் இயக்குனர் சிவா சந்திப்பு… மீண்டும் தொடங்குகிறதா ஷூட்டிங் ?
நடிகர் ரஜினியை இயக்குனர் சிறுத்தை சிவா திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘அண்ணாத்த’. சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. கொரானாவால் நிறுத்தப்பட்டிருந்த இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக தொடங்கியது. ஹைதாராபாத் பிலிம் சிட்டியில் ஆரம்பிக்கப்பட்ட ஷூட்டிங் ஒரு வாரம் நடைபெற்றது. இந்த ஷூட்டிங்கில் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஷூட்டிங் நடைபெற்றபோது படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து ஷூட்டிங் பாதியில் மீண்டும் நிறுத்தப்பட்டது. பிறகு ரஜினிக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிக்கு கிசிச்சை அளித்து, தொடர்ந்து ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் ஏப்ரல் மாதத்திற்கு பிறகுதான் ரஜினி படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ‘அண்ணாத்த’ படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாகும் என கடந்த வாரம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. இதையடுத்து நடிகர் ரஜினியை அவரது வீட்டில் இயக்குனர் சிவா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை எப்போது தொடங்குவது என இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது. இதையடுத்து ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என தெரிகிறது.