"என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை சீனாக்காரர்கள் ஹேக் செய்துவிட்டார்கள்": நடிகை கங்கனா பகீர் புகார்!

நடிகை கங்கனா ரணாவத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை சீனாக்காரர்கள் ஹேக் செய்த்துவிட்டதாகப் புகார் தெரிவித்துள்ளார்.
நடிகை கங்கனா ரணாவத் வாய் திறந்தாலே அது சர்ச்சையாகத் தான் இருக்கும் என்றளவிற்கு வந்துவிட்டது. சுஷாந்த் மரணத்தில் ஆரம்பித்த சர்ச்சை தற்போது வரை ஓயவில்லை. இதற்கிடையில் தொடர்ந்து போலிச் செய்திகளையும் அவதூறுகளையும் பரப்பி வந்ததாக இவரின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் இன்ஸ்டாகிராமை களமாக மாற்றியுள்ளார் கங்கனா. அங்கே தொடர்ந்து பதிவிட்டு வந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், “நேற்று இரவு என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை சீனாவிலிருந்து யாரோ ஒருவர் ஹேக் செய்ய முயற்சிப்பதாக இன்ஸ்டகிராமிலிருந்து எச்சரிக்கை அறிவிப்பு வந்தது. இன்று காலை தாலிபான்கள் குறித்து நான் போட்ட பதிவுகள் அனைத்தும் காணாமல் போய்விட்டன. என்னுடைய கணக்கும் செயலிழந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் நிர்வாகத்தை தொடர்பு கொண்ட பிறகே என்னால் தற்போது அதற்குள் நுழைய முடிகிறது. ஆனால் பதிவு எழுத முயலும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் தானாவே லாக்அவுட் ஆகி வெளியே வந்துவிடுகிறது. என்னுடைய போனில் தான் பிரச்சினையோ என்று நினைத்திருந்தேன். என்னுடைய சகோதரி போனில் என்னுடைய இன்ஸ்டாவை ஓபன் செய்து பார்த்தேன். அதிலும் இதேபோன்றதொரு பிரச்சினையைச் சந்தித்தேன். இது ஒரு மிகப்பெரிய சர்வதேச சதியாக இருக்கலாம். என்னால் நம்பவே முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.