துருவ நட்சத்திரம் படத்தை ஜூலை 15-க்குள் வெளியிடலாம்: உயர்நீதிமன்றம்..!!

Q

சியான் விக்ரம் நடிப்பில் உருவான ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் எப்போது வெளியாகும் என்பதுதான் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. 

கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஸ்பை த்ரில்லர் (Spy-thriller) திரைப்படம், ஆக்‌ஷன் மற்றும் நேர்த்தியான உருவாக்கத்திற்கு பெயர்பெற்ற கௌதம் மேனனின் ஸ்டைலில் உருவானது. சியான் விக்ரம் ‘ஜான்’ என்கிற ரகசிய ஏஜென்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜின் இசை, சர்வதேச தரம் வாய்ந்த ஒளிப்பதிவு என டீசர்கள் மற்றும் பாடல்கள் மூலம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை இப்படம் ஏற்கனவே ஏற்படுத்தியிருந்தது. நிதி நெருக்கடியால் ஒவ்வொரு முறையும் படம் ரிலீஸாகாதபோது ஏமாற்றமடைந்த ரசிகர்களுக்கு, இந்த நீதிமன்ற உத்தரவு மிகப்பெரிய நிம்மதியைத் தந்துள்ளது.

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மதன், இயக்குனர் கவுதவ் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் பங்குதாரர்களாக உள்ள கொண்டாடுவோம் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்த படம் துருவ நட்சத்திரம். மதனின் எஸ்கேப் ஆர்டிஸ்ட் தயாரித்த எனை நோக்கி பாயும் தோட்டா படம் தொடர்பான நிதிப் பிரச்சினை காரணமாக துருவ நட்சத்திரம் படத்தில் உள்ள தனது 50 சதவீத உரிமையை புண்ணியமூர்த்தி மற்றும் பிரேம்குமார் ஆகிய இருவருக்கு மதன் வழங்கினார்.

கடந்த 2023ல் படத்தை வெளியிட முயற்சித்தபோது, தங்களுக்கு சேரவேண்டிய தொகையை தராமல் படத்தை வெளியிட கூடாது என புண்ணியமூர்த்தியும், பிரேம்குமாரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து படத்துக்கு தடை உத்தரவு பெற்றனர். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, துருவ நட்சத்திரம் படத்தை ஜூன் 15ஆம் தேதிக்குள் வெளியிட அனுமதி அளித்த உத்தரவிட்டார். அன்றைய தேதிக்குள் படத்தை வெளியிட இயலவில்லை என்றால் கால நீட்டிப்புக் கோரி நீதிமன்றத்தை நாடலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

Share this story