4 வருட காதல் கைகூடியது… திருமணம் குறித்து ‘கயல்’ ஆனந்தி ஓபன் டாக்
நானும், சாக்ரடீசும் 4 வருடங்களாக காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் கொண்டுள்ளோம் என கயல் ஆனந்தி தெரிவித்துள்ளார்.
தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியான ‘கயல்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஆனந்தி. அதனால் இவரது பெயர் கயல் ஆனந்தி என்று மாறியது. ஆனால் உண்மையான பெயர் ரக்ஷிதா.
தெலங்கானாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் முதலில் தெலுங்கு படத்தில் தான் நடிகையாக அறிமுகமானார். பின்னர் வெற்றிமாறன் தயாரித்த பொறியாளன், பிரபு சாலமனின் கயல் ஆகிய படங்களின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படத்தைத் தொடர்ந்து சண்டி வீரன், த்ரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றார். மாரி செல்வராஜ் இயத்தில் 2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தில் ஜோ என்ற கதாபாத்திரத்தில் கதிருக்கு ஜோடியாக நடித்திருந்த ஆனந்திக்கு அந்தப் படம் பெரும் பெயரை பெற்றுக் கொடுத்தது.
இப்போது டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும், மூடர் கூடம் நவீன் இயக்கியுள்ள அலாவுதீனின் அற்புத கேமரா, ராவணக் கூட்டம், தெலுங்கில், ஸோம்பி ரெட்டி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். நடிகை ஆனந்திக்கு தெலங்கானா மாநிலம் வாராங்கல்லில் கடந்த 7 ஆம் தேதி சாக்ரடீஸ் என்பவருடன் திருமணம் நடந்தது.
மணமகன் சாக்ரட்டீஸ், இணை இயக்குனராகப் பணியாற்றி வருகிறார். இவர் இயக்குனர் மூடர் கூடம் நவீனின் மைத்துனர். நவீன் மனைவியின் தம்பி. நவீன் இயக்கியுள்ள அலாவுதீனின் அற்புத கேமரா படத்தில் இணை இயக்குனராக, சாக்ரடீஸ் பணியாற்றியுள்ளார். இப்போது அக்னிச் சிறக்குகள் படத்திலும் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
திருமணம் செய்துகொண்டது பற்றி நடிகை ஆனந்தி கூறும்போது, நானும், சாக்ரடீசும் 4 வருடங்களாக காதலித்து வந்தோம். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்தோம். அதன்படி பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம்.
திருமணம் செய்து கொண்டதால் சினிமாவில் இருந்து விலக மாட்டேன். தொடர்ந்து நடிப்பேன். அதற்கு என் கணவர் சம்மதம் தெரிவித்து இருக்கிறார். இப்போது நான்கு படங்களில் நடித்து வருகிறேன். அந்த படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு, புதிய படங்களை நடிக்க ஒப்புக் கொள்வேன் என்று கூறியுள்ளார்.