கே.ஜி.எப் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஜூனியர் என்.டி.ஆர்.
கே.ஜி.எப் இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் முன்னணி ஹீரோவாக உள்ள ஜூனியர் என்.டி.ஆர் ராஜமௌலி இயக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்‘ படத்தில் ராம் சரணுடன் இணைந்து நடித்து வருகிறார். சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கொரானா அச்சுறுத்தல் காரணமாக தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த படத்தை முடித்து ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் தகவல் ஏற்கனவே வெளியானது. பிரபல இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாக இருக்கிற இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பதை சமீபத்தில் உறுதி செய்தார். இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ஆர்.ஆர்.ஆர் படத்தை முடித்த பிறகு உடனடியாக இந்த படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளது.
இந்நிலையில் கே.ஜி.எப் இயக்குனர் பிரசாந்த் நீலின் அடுத்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதற்கிடையே ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி ஒன்றை அளித்திருந்த ஜூனியர் என்.டி.ஆரிடம், இந்த படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், கே.ஜி.எப் இயக்குனர் பிரசாந்த் நீலுடன் ஒரு படத்தில் நடிப்பது உண்மைதான் என்றும், அது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தெரிவித்தார்.