எனது இதயத்துக்கு நெருக்கமான படம் ‘இறைவி’.. 5வது ஆண்டை கொண்டாடும் கார்த்திக் சுப்புராஜ்
‘இறைவி’ திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி படக்குழுவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்ற திரைப்படம் ‘இறைவி’. விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் வசூல்ரீதியாக வெற்றிப்பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
சி.வி.குமார் மற்றும் ஞானவேல்ராஜா ஆகியோர் இணைந்து தயாரித்திருந்த இப்படம் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி படக்குழுவினர் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இறைவி’ வெளியாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இந்த படம் எனது இதயத்திற்கு மிக மிக நெருக்கமான படம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படத்தின் கடைசி வரைவு பக்கத்தையும் வெளியிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டுள்ள பதிவில், இந்தப் படம் சினிமா துறையில் ஒரு மைல்கல். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்தீர்கள். ரயில் நிலையத்தில் படமாக்கப்பட்ட தினத்தை என்னால் மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.