25வது திருமண நாள்.. கேக் வெட்டி அன்பை பரிமாறிக் கொண்ட அஜித் - ஷாலினி...!

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான அஜித் - ஷாலினி 25வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடினர்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர காதல் தம்பதிகளாக வலம்வருபவர்களில் அஜித் - ஷாலினி முதன்மையாக இருக்கிறார்கள். இயக்குநர் சரண் இயக்கி கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான ‘அமர்க்களம்’ படத்தில் இருவரும் முதன்முறையாக ஜோடியாக நடித்தார்கள். அப்போது இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி காதல் மலர்ந்தது. பின்பு, அது திருமணத்தில் முடிந்தது.
இருவரும் திருமணம் 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு அனோஷ்கா குமார் என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர். ஒருபுறம் திரைப்படம், மறுபுறம் கார் ரேஷிங் என பிசியாக வலம் வந்தாலும், குடும்பத்திற்கு நேரம் ஒதுக்கி கவனிப்பதை அஜித் இதுவரைக்கும் தவறியதே இல்லை. அதே போல், அஜித் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும், ரசிகர்களோடு ரசிகராக திரையரங்கில் பார்த்து ஷாலினி மகிழ்வார். அந்த அளவுக்கு ஒரு அழகான தம்பதியாக இருவரும் மிளிர்கின்றனர்.
இந்த நிலையில், அஜித் - ஷாலினிக்கு திருமணமாகி நேற்றோடு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த வெள்ளி விழாவை கொண்டாடும் விதமாக, இருவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள். இது தொடர்பான வீடியோவை ஷாலினி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இருவரும் மகிழ்ச்சியோடு மாறி மாறி கேக் ஊட்டி தனது அன்பை பரிமாறிக் கொள்ளும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அஜித் - ஷாலினியின் 25வது திருமண நாளுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.