WeekEnd Vide- நாளை ஒரே நாளில் வெளியாகும் 8 தமிழ் படங்கள்!

தமிழ் சினிமாவில் இந்த வாரம் மொத்தம் எட்டு படங்கள் நாளை வெளியாக உள்ளது. ஜிவி பிரகாஷின் கிங்ஸ்டன், யோகி பாபுவின் லெக் பீஸ், லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா நடிப்பில் ஜென்டில்வுமன், புதுமுகங்களின் எமகாதகி, பாரதிராஜா, ரியோ உள்ளிட்டோர் நடிப்பில் நிறம் மாறும் உலகில், விமல் நடித்த படவா, மர்மர், அம்பி உள்ளிட்ட 8 படங்கள் ரிலீஸ் ஆகிறது.
நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடித்துள்ள படம் கிங்ஸ்டன். இந்தப் படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கியுள்ளார். கடலில் உள்ள மர்மத்தைக் கண்டறியும் மீனவரின் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் திவ்யபாரதி, சேத்தன், அழகப்பெருமாள், குமரவேல் நடித்துள்ளனர். கிங்ஸ்டன் திரைப்படம் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 25-வது படமாகும். இதற்கு அவரே இசையமைத்துள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
லிஜோமோல், லாஸ்லியா, ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜென்டில்வுமன். அறிமுக இயக்குநர் ஜோஸ்வா சேதுராமன் இயக்கியுள்ளார்.ஒரே ஆணுடன் உறவிலிருக்கும் இரு பெண்களின் கதையாக ஜென்டில்வுமன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப்படம் நாளை வெளியாகிறது. நகைச்சுவை நடிகர் ஸ்ரீநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லெக் பீஸ். இதில் யோகி பாபு , வி டி வி கணேஷ் , ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், ரமேஷ் திலக், மைம் கோபி, ஜான் விஜய், சரவண சுப்பையா, சாம்ஸ் , மதுசூதன் ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு பிஜோர்ன் சுர ராவ் இசையமைத்திருக்கிறார். காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படமும் நாளை திரைக்கு வருகிறது.
அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில், நடிகர்கள் ரூபா, நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ராஜு ராஜப்பன், சுபாஷ் ராமசாமி, ஹரிதா என பலர் நடித்துள்ள படம் எமகாதகி. இறந்துபோன பெண்ணின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் உறவினர்கள் தவிக்கிறார்கள்.ஏன் அந்த உடல் வீட்டை விட்டு வெளியே வர மறுக்கிறது என்பதை சஸ்பென்ஸ் கலந்த படமாக எடுத்துள்ளனர்.இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடித்துள்ள படம் நிறம் மாறும் உலகில். இவர்களுடன் சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், கனிகா, ஆதிரா உட்பட பலர் நடித்துள்ளனர். சிக்னேச்சர் புரொடக் ஷன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமாஇன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை பிரிட்டோ ஜே.பி இயக்கியுள்ளார். நான்கு கதை நான்கு வாழ்க்கையை ஒரு விஷயம் ஒன்றிணைக்கிறது.மனித உணர்களை பற்றி பேசும் படமாக உருவாகியுள்ள இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படங்களுடன் பல ஆண்டுகளாக வெளியீட்டிற்க்காக காத்திருக்கும் விமலின் படவா படம் நாளை வெளியாகிறது மேலும் மர்மர், அம்பி உள்ளிட்ட படங்களும் நாளை வெளியாகிறது.