இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கார் கண்ணாடி உடைப்பு... போலீசார் தீவிர விசாரணை !
இயக்குனர் ஆர்கே செல்வமணியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
90-களில் பிரபல இயக்குனராக இருந்தவர் ஆர்.கே.செல்வமணி. விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரன்’ உள்ளிட்ட சில சூப்பர் திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது ஃபெப்சி சங்கத்தின் தலைவராகவும் ஆர்கே செல்வமணி உள்ளார். நடிகையும், ஆந்திர அமைச்சராகவும் இருக்கும் நடிகை ரோஜாவின் கணவரான அவர், தற்போது சென்னை சாலிகிராமத்தில் உள்ள கண்ணாம்மாள் தெருவில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் எப்போதும் போல் தனது இன்னோவா காரை வீட்டிற்கு முன்னால் ஆர்கே செல்வமணி நிறுத்தியிருந்தார். இதையடுத்து காரை மீண்டும் பார்த்தபோது பின்னாடி உள்ள கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. ஆட்டோ ஒன்றில் வந்த மர்மநபர் கற்களை வீசி கார் கண்ணாடியை சேதப்படுத்தியதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.