விஜய்காந்த் படத்தின் காப்பியா ‘ஜவான்’ ?... அட்லி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் !
கதை திருட்டில் ஈடுபட்டதாக இயக்குனர் அட்லி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்தவர் அட்லி. ஆர்யா - நயன்தாரா நடிப்பில் வெளியான ‘ராஜாராணி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் மோகன் நடிப்பில் சூப்பர் ஹிட்டடித்த ‘மெளனராகம்’ படத்தின் கதை என கூறப்பட்டது.
இதையடுத்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். இதனால் அட்லியின் திரைப்படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த படங்களும் 90-களில் வெளியான சூப்பர் படங்களின் காப்பி என கூறப்பட்டது.
தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் அட்லி மீது பரபரப்பு புகார் ஒன்று தயாரிப்பாளர் சங்கத்தில் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி விஜய்காந்த் நடிப்பில் வெளியான ‘பேரரசு’ கதையை தான் தற்போது ‘ஜவான்’ என்ற பெயரில் திரைப்படமாக அட்லி எடுத்து வருவதாகவும், அது குறித்து விசாரிக்கவேண்டும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து வரும் நவம்பர் 9-ஆம் தேதிக்கு மேல் விசாரணை நடத்த தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.