சவுதி அரேபிய திரைப்பட விழாவில் அமீர்கானுக்கு கவுரவ விருது
பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு சவுதி அரேபிய திரைப்பட விழாவில் மிக உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியா ஜெட்டாவில் வரும் 14ம் தேதிவரை செங்கடல் திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது. இதன் துவக்க விழாவில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தனர். இந்த விழாவில் இந்திய நடிகர் அமீர்கானும் அழைப்பின் பேரின் கலந்துகொண்டார். இந்த விழாவில் அமீர்கானுடன் கரீனா கபூர், வில் ஸ்மித், வின் டீசல். ஸ்பைக் லீ ஆகிய பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். இந்த விழாவில் செங்கடல் திரைப்பட விழாவில் எகிப்திய நடிகை மோனா ஜகி உடன் அமீர்கானுக்கு கவுரவ விருது அளிக்கப்பட்டது. உலக சினிமாவில் அமீர்கானின் பங்களிப்பை பாராட்டும் விதமாக இந்த கவுரவம் செய்யப்பட்டாதாக விழாக் குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.
இதில் கலந்துகொண்டு அமீர்கான் பேசியதாவது 'இங்கு வந்திருப்பது மிகவும் கவுரவமாக இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக நான் நடித்த படங்களை பாராட்டும் விதமாக இது நடந்திருப்பதற்கும் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். கடந்த 30 ஆண்டுகளாக என்னுடைய சினிமா பயணத்தில் என்னுடன் பணியாற்றிய பல எழுத்தாளர்கள், இயக்குநர்களுக்கு நான் எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன். செங்கடல் திரைப்பட விழாவில் பங்கேற்பது மிக்க மகிழ்ச்சியாக கருதுகிறேன். மீண்டும் இங்கு வந்து இந்த நாட்டின் கலாச்சாரத்தை நெருக்கமாக அனுபவிக்க விரும்புகிறேன். நான் விரும்பியதை படமாக எடுக்க, நடிக்க, தயாரிக்க எனக்கு சுதந்திரம் இருக்கிறது. தயாரிப்பதுதான் சற்று கடினமான வேலையாக இருக்கிறது.எந்தப் படமும் எளிதானது இல்லை. எல்லா படங்களையும் பதற்றத்துடனே தேர்வு செய்வேன். பல இயக்குநர்களின் ரிஸ்க் எடுக்கிறார்கள். அவர்களைப் பார்த்துதான் நானும் அந்தமாதிரியான முடிவுகளை எடுக்க ஆரம்பித்தேன்.நீங்கள் சாதிக்க வேண்டுமென்றால் ரிஸ்க் எடுத்தே ஆகவேண்டும்' என்றார்.
مباشرةً من الحفل الافتتاحي للدورة الرابعة من #مهرجان_البحر_الأحمر_السينمائي_الدولي؛ نجم بوليوود عامر خان، وهو أحد اختياراتنا التكريميّة لهذا العام لجائزة اليُسر الفخريّة.#للسينما_بيت_جديد pic.twitter.com/jtmlp4Fvr0
— RedSeaFilm (@RedSeaFilm) December 5, 2024
பாலிவுட்டில் பல வெற்றிப்படங்களையும், வித்தியாசமான நடிப்பையும் வழங்கியபடி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாத் துறையில் இருந்து பிரகாசித்து வருபவர், அமீர்கான். யாதோன் கி பாரத் சினிமா மூலம் பாலிவுட்டில் நுழைந்த அமீர்கான், 1988-ம் ஆண்டு வெளியான `கியாமத் சே கியாமத் தக்' படத்தில் முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடித்தார். வெற்றிப்படமாக அமைந்த அந்த படத்தின் வாயிலாக, பாலிவுட் ரசிகர்கள் அமீர்கானை ஒரு நடிகராக ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து 'லகான்', 'ரங்க் தே பசந்தி', 'கஜினி', '3 இடியட்ஸ்', 'தூம் 3', 'பி.கே.', 'தங்கல்' போன்ற படங்கள் அமீர்கான் நடிப்பில் உச்சம் தொட்ட படங்களாக பார்க்கப்படுகின்றன. இதில் 'பி.கே.' படம், பாலிவுட்டில் முதன் முறையாக ரூ.800 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த படம் என்ற சிறப்புக்குரியது.
1994-ம் ஆண்டு வெளியாகி 6 பிரிவுகளில் ஆஸ்கார் விருதை வென்ற ஹாலிவுட் படம் 'பாரஸ்ட் கம்ப்.' இந்தப் படத்தைத்தான் சிறிய மாற்றங்களுடன், ரீமேக் செய்து `லால் சிங் சத்தா' என்ற பெயரில் எடுத்திருந்தார், அமீர்கான். இவரின் நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பினை பெற்றாலும் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்தது. சமீபத்தில் அவர் தனது குடும்பத்துடன் நேரம் செலவிட இருப்பதால் இனி சில ஆண்டுகளுக்கு நடிக்க போவதில்லை என கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.