விரைவில் ‘மகாபாரதம்’ படத்தின் பணிகளை தொடங்கும் ஆமீர்கான்...!

ameer khan

மகாபாரதம்’ படத்தை உருவாக்குவது தனது வாழ்நாள் கனவு என நடிகர் ஆமீர்கான் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படத்துக்கான பணிகள் எப்போது தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆமீர்கான் நடிப்பில் கடைசியாக திரையரங்குகளில் வெளியான படம் ‘லால் சிங் சத்தா’. அதன் பிறகு அவர் சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு ‘லாபத்தா லேடீஸ்’ படத்தை தயாரித்தார். இடைவெளிக்குப் பின் ஆமீர்கான் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ளது ‘சிதாரே ஜமீன் பர்’. இதைத் தொடர்ந்து அவர் ‘மகாபாரதம்’ கதையை படமாக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தனது வாழ்நாள் குறிக்கோள் என்னவென்றால் ‘மகாபாரதம்’ கதையினை படமாக்குவது தான் என்று ஆமீர்கான் குறிப்பிட்டு இருந்தார். இந்த ஆண்டே இதற்கான பணிகளை தொடங்க இருப்பதாக அவர் கூறினார். ஆமீர்கான் அளித்த பேட்டியில், “இந்த வருடமே ‘மகாபாரதம்’ படத்தின் பணிகளை ஆரம்பிக்க வேண்டும். இதன் படப்பிடிப்பு தொடங்க சில காலம் ஆகலாம்.

  ameer khan

படத்தை எழுதி முடிக்கவே சில மாதங்கள் தேவைப்படும்.  பெரிய கதை என்பதால் பல பாகங்களாக எடுக்க திட்டமிட்டு இருக்கிறேன். ஒவ்வொரு பாகத்துக்கும் யார் பொருத்தமான நடிகர் என்பதை வைத்து தான் நடிகர்கள் தேர்வு இருக்கும். நான் நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால், ‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ பாணியில் ஒவ்வொரு பாகத்துக்கு ஒவ்வொரு இயக்குநர் என்று இருந்தால் மட்டுமே சீக்கிரமாக படமாக்க முடியும்” என்றார். 

Share this story