பழம்பெரும் நடிகர் ஜி.சீனிவாசன் காலமானார்

ச்

நடன இயக்குநர் புலியூர் சரோஜாவின் கணவர் பழம்பெரும் நடிகர் ஜி.சீனிவாசன்(95) காலமானார். அவரது உடல் சென்னை அசோக் நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை (ஜூன் 27, 2025) பிற்பகல் 2:30 மணிக்கு ஏவிஎம் இடுகாட்டில்   நடைபெறும்.

புலியூர் சரோஜாவின் கணவர் ஸ்ரீனிவாசன் கடந்த 1975-ம் ஆண்டு ‘அவள் ஒரு காவியம்’ என்ற திரைப்படத்தில் தான் அறிமுகமானார். ஆனால் அவருக்கு ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற படம் தான் நல்ல பெயரை பெற்று கொடுத்தது. அந்த படத்தில் அவர் மருது என்ற கேரக்டரில் நடித்திருப்பார். இதனையடுத்து பாரதிராஜா இயக்கத்தில் உருவான சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் ஆகிய இரண்டு படங்களிலும் தொடர்ச்சியாக நடித்தார். திசை மாறிய பறவைகள், கன்னி பருவத்திலேயே, ஏணிப்படிகள், நல்லதோர் குடும்பம் ஆகிய படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

கடந்த 1980 முதல் 90 வரை அவர் சுமார் 30 படங்களில் நடித்தார். பூட்டாத பூட்டுக்கள், முரட்டுக்காளை, சட்டம் ஒரு இருட்டறை, ராணுவ வீரன், கடல் மீன்கள், கிளிஞ்சல்கள், வாழ்வே மாயம், வெள்ளை ரோஜா, ஸ்ரீ ராகவேந்தர், இதயகோயில், சிதம்பர ரகசியம், ராஜாதி ராஜா, என்ன பெத்த ராசா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவற்றில் பெரும்பாலான படங்களில் அவர் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் சில படங்களில் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1990-ம் ஆண்டுக்கு பிறகு ஸ்ரீனிவாசன் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இருப்பினும் ராஜா எங்க ராஜா, புதிய ராகம், காவல் கீதம் ஆகிய மூன்று படங்களில் மட்டுமே நடித்தார். அதன் பிறகு அவர் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு 2005-ம் ஆண்டு வெளியான ‘அய்யா’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இதனை அடுத்து நகரம், வேங்கை ஆகிய படங்களில் நடித்த நிலையில் ‘வேங்கை’ படம் அவரது கடைசி படமாக அமைந்தது.

நடிகர் ஸ்ரீனிவாசன் நடன இயக்குனர் புலியூர் சரோஜாவை மணந்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருந்தார். ஆனால் அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சாலை விபத்தில் காலமானார்.அந்த பையன் நினைவாக சரோஜா மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகிய இருவரும் இணைந்து சென்னையில் ஒரு பள்ளியை நடத்தி வருகின்றனர். அந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this story