நடிகர் கவுண்டமணி நில வழக்கு: தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

kavundamani

வணிக வளாகம் கட்டுவதற்காக, நடிகர் கவுண்டமணி கொடுத்த 5 கிரவுண்ட் நிலத்தை மீண்டும் அவரிடமே ஒப்படைக்கும் படி தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில், நடிகர் கவுண்டமணி, 1996ஆம் ஆண்டு நளினி பாய் என்பவருக்கு சொந்தமான நிலத்தை வாங்கினார். அந்த நிலத்தை ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்ற கட்டுமான நிறுவனத்திடம் கொடுத்து 22,700 சதுர அடி பரப்பிலான வணிக வளாகத்தை 15 மாதங்களில் கட்டி முடித்து ஒப்படைக்க வேண்டுமென ஒப்பந்தம் செய்துள்ளார்.

கட்டுமான பணிகளுக்காகவும், ஒப்பந்ததாரர் கட்டணமாக 3 கோடியே 58 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டு, 1996ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரை 1 கோடியே 4 லட்சம் ரூபாய் கவுண்டமணி அந்நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார். இந்நிலையில், 2003ஆம் ஆண்டு வரை ஒப்பந்த படி கட்டுமான பணிகள் எதுவும் தொடங்கவில்லை எனக் கூறி, கவுண்டமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, வழக்கறிஞர் ஆணையரை நியமித்தார். சம்பந்தப்பட்ட கட்டிடத்தை ஆய்வு செய்த வழக்கறிஞர் ஆணையர், 46 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கான பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டிருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தார்.

இந்த அறிக்கையைச் சுட்டிக்காட்டி, கட்டுமான பணிகளை முழுமையாக முடித்துவிட்டு பணம் தராவிட்டால் தான் அதைக் கேட்க முடியும் என்றும், முடித்த பணிகளுடன் ஒப்பிடும் போது 63 லட்ச ரூபாய் அதிகமாகவே நடிகர் கவுண்டமணியிடம் கட்டுமானம் நிறுவனம் பெற்றுள்ளதாக கூறி, நடிகர் கவுண்டமணியிடம் இருந்து பெற்ற ஐந்து கிரவுண்ட் 454 சதுர அடி நிலத்தை மீண்டும் அவரிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும், 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மாதம் ஒன்றுக்கு 1 லட்ச ரூபாய் வீதம் இழப்பீடாக கவுண்டமணிக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

தனி நீதிபதி பிறப்பித்த இந்த தீர்ப்பை எதிர்த்து தனியார் கட்டுமான நிறுவனமான ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் நிறுவனம் 2021ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தும், கட்டுமான நிறுவனத்தின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்துள்ளது.

Share this story