நடிகர் கவுண்டமணி மனைவியின் உடல் தகனம்..

நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தியின் உடல் இறுதி சடங்கு முடிந்து சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தமிழ் சினிமாவில் காமெடி கிங் என்று பலராலும் கொண்டாடப்படும் நடிகர் கவுண்டமணி 1980 காலக்கட்டம் தொடங்கி இரண்டாயிரம் ஆண்டு வரை சினிமாவில் கொடிகட்டிப் பறந்தார். சினிமாவில் நட்சத்திரமாக ஜொலித்த காலக்கட்டத்திலேயே சாந்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து, சென்னை தேனாம்பேட்டையில் தனது மனைவி சாந்தியுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு செல்வி மற்றும் சுமித்ரா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே சாந்தி உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று காலை சாந்தி காலமானார். தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடலுக்கு நடிகர்கள் சத்யராஜ், செந்தில், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து சாந்தியின் உடலுக்கு இன்று காலை 11 மணி அளவில் இறுதி சடங்கு நடைபெற்றது. தொடர்ந்து, சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
அதற்காக சென்னை தேனாம்பேட்டையில் இருந்து பெசன்ட் நகர் மயானத்திற்கு நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. கவுண்டமணி தனது மனைவிக்காக சடங்குகளை செய்தார். முன்னதாக, சீமான் இறுதிச்சடங்கு நடக்கும் இடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல், சாந்தியின் உடலுக்கு நடிகர்கள் கார்த்தி, பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.