ரஜினியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் : நடிகர் பிரித்விராஜ் ஓபன் டாக்...!

மோகன் லால் நடித்துள்ள எம்புரான் படத்தில் ரஜினியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒரு காட்சியாக அமைக்கப்பட்டுள்ளதாக இயக்குனரும் நடிகருமான பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.
மலையாள முன்னணி நடிகரான பிரித்விராஜ் கடந்த 2019 மோகன்லாலை வைத்து லூசிபர் என்ற படத்தை இயக்கினார். தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகமான 'எம்புரான்' படத்தை இயக்கியுள்ளார். வரும் மார்ச் 27ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. சமீபத்தில் எம்புரான் பட டிரைலரை ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்று அவருக்கு போட்டுக்காட்டி வாழ்த்துகளை பெற்று வந்தார் பிரித்விராஜ். இந்நிலையில், படம் தொடர்பான ஒரு நேர்காணலில் லூசிபர் படத்தில் மோகன்லால் காரில் இருந்து இறங்கி வரும் ஓப்பனிங் காட்சி குறித்து ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.
அதில், அதாவது பல வருடங்களுக்கு முன்பு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது போயஸ் கார்டன் சாலை பகுதியில் முதல்வரின் கான்வாய் செல்வதற்காக ரஜினிகாந்தின் காரை செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். கொஞ்ச நேரத்தில் டென்ஷனான ரஜினிகாந்த் காரில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்து விட்டார். அவர் நடப்பதை பார்த்ததும் பெரும் கூட்டம் கூடிவிட்டது என்று சொல்லப்பட்டது.
“இந்த செய்தியை நான் செய்தித்தாளில் படித்திருக்கிறேன். அதை இன்ஸ்பிரேஷன் ஆக வைத்து தான் லூசிபர் படத்தின் ஓப்பனிங் காட்சியை உருவாக்கினேன். அறிமுக காட்சியில் மோகன்லாலின் காரை செல்ல விடாமல் போலீஸார் தடுப்பார்கள். அதனால் மோகன்லால் சாதுரியமாக, கார் தானே போகக்கூடாது.. நான் போக தடை இல்லையே என்று கூறி காரில் இருந்து இறங்கி நடந்து செல்லும் விதமாக அந்த காட்சியை உருவாக்கினேன்” என்று கூறியுள்ளார். இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.