“4 ஆண்டுகளுக்கு பின் செல்கிறேன்” - இமயமலைக்கு செல்லும் முன் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
![rajini](https://ttncinema.com/static/c1e/client/88252/uploaded/952be0c79370be9e82b06fbeb3223a7d.jpg)
4 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலைக்கு செல்லவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்‘ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் தனது ஒவ்வொரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பும் நடிகர் ரஜினி இமயமலைக்கு செல்வது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நலக்குறைவு மற்றும் கொரானா பிரச்சினை காரணமாக இமயமலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் ‘ஜெயிலர்’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இன்று காலை இமயமலைக்கு நடிகர் ரஜினிகாந்த் செல்கிறார்.
அங்கு 7 நாட்கள் ஆன்மீக சுற்றுலா பயணம் செல்லவுள்ள ரஜினி, அங்குள்ள பத்ரிநாத், கேதர்நாத் மற்றும் பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவுள்ளார். இந்நிலையில் இமயமலைக்கு செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினி, 4 வருடங்களுக்கு பிறகு இமயமலை செல்கிறேன். கொரானாவால் சில ஆண்டுகள் இமயமலைக்கு செல்லவில்லை என்றார். மேலும் ஜெயிலர் படம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நீங்கள் பார்த்துவிட்டு பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்று கூறினார்.