மாமனாரை மேடையில் புகழ்ந்த நடிகர் சிவகார்த்திகேயன்...!
நேசிப்பாயா' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மாமனார் குறித்தும், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா குறித்தும் பாராட்டி பேசியுள்ளார். ’நேசிப்பாயா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், "நான் இந்த விழாவிற்கு வந்தது முக்கிய காரணம் இப்படத்தின் தயாரிப்பாளர் சிநேகா ப்ரிட்டோ மற்றும் இயக்குநர் விஷ்ணுவர்தன் தான். இப்படத்தின் தொடக்க விழாவிற்கு அவர்கள் அழைத்த போது என்னால் வர முடியவில்லை. மேலும் தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ எவ்வளவு நல்ல மனிதர் என்பதை கேள்விப்பட்டுள்ளேன். அவர் மற்றவர்களுக்கு அளிக்கும் மரியாதை, தொழில் சார்ந்த விஷயங்களில் நடந்து கொள்ளும் விதம் என ஒரு நல்ல மனிதராக கேள்விப்பட்டுள்ளேன்” என்றார்.
பின்னர் தனது மாமனார் பற்றி பேசிய சிவகார்த்திகேயன், “நாம் வாழ்க்கையில் தாய், தந்தை, நண்பர்கள் என அனைத்து உறவுகள் பற்றியும் வாய்ப்பு கிடைக்கும் போது பாராட்டி பேசி விடுவோம். ஆனால் மாமனார் என்பது ஒரு ஸ்பெஷலான உறவு. நடிகர் ஆகாஷுக்கு அவ்வாறு அமைந்துள்ளது, உங்களுக்கு நல்ல மாமனாராக சேவியர் ப்ரிட்டோ கிடைத்துள்ளார். ஏனென்றால் என் மாமனார் எனக்கு ரொம்ப ஸ்பெஷல், எனக்கு அவரது மகளை கொடுத்தது பெரிய விஷயம். இப்போதுள்ள தொகுப்பாளர்கள் பாலா, ஏஞ்சலின் ஆகியோர் லட்சத்தில் சம்பளம் வாங்கின்றனர்.
ஆனால் நான் தொகுப்பாளராக இருந்த போது எனக்கு 4500 ரூபாய் தான் கிடைக்கும். அப்போது என்னை நம்பி அவரது மகளை திருமணம் செய்து வைத்தார். நான் சினிமாவில் சாதிப்பேன் என் மாமனார் என்னை நம்பினார்” என கூறினார். இதனைத்தொடர்ந்து விஷ்ணுவர்தன் குறித்து பேசிய சிவகார்த்திகேயன், “நேசிப்பாயா பாடல்கள் பயங்கரமாக உள்ளது. யுவன், விஷ்ணு காம்போ குறித்து சொல்லவே தேவையில்லை. அது மேஜிக்கல் கூட்டணி. எனது கல்லூரி காலத்தில் இரண்டு பொழுபோக்குகள் தான் ஒன்று சினிமா பார்ப்பது, மற்றொன்று கேசட்கள் வாங்கி பாடல்கள் கேட்பது.
யுவன், விஷ்ணுவர்தன் கூட்டணியில் குறும்பு திரைப்படம் தான் ரீமிக்ஸ் கலாசாரத்தை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியது. விஷ்ணுவர்தன் சார் அனைத்து படங்களையும் தியேட்டரில் சென்று பார்த்துள்ளேன். அவர் இயக்கிய ’ஷேர்ஷா’ (shershah) சூப்பர் திரைப்படம். அமரன் டீசர் வெளியான போது பலர் அதனை ’ஷேர்ஷா’ படத்துடன் தான் ஒப்பிட்டு பாராட்டினர்" என்றார்.
#Sivakarthikeyan About #Yuvan ..🔥
— Laxmi Kanth (@iammoviebuff007) January 4, 2025
"You are the Greatest of All Time and Beyond time sir.. You worked in Many New Directors & New Hero films.. U gave hits for everyone.. I might've come from Appa's Blood.."🤝 pic.twitter.com/xqtOY0HztG
பின்னர் யுவன் ஷங்கர் ராஜா குறித்து சிவகார்த்திகேயன் பேசுகையில், “யுவன் சாரை சிம்பிளாக கோட் என்று சொல்லலாம். ஏனென்றால் சிறிய இயக்குநர்கள், பெரிய இயக்குநர்கள் என்று பார்க்காமல் தன்னை நம்பி வந்தவர்களுக்கு அவ்வளவு ஹிட் பாடல்கள் வழங்கியுள்ளார். இந்த விஷயம் அவரது அப்பாவிடம் வந்தது, அவரது ரத்தத்தில் உள்ளது. ஒருமுறை அவரது பாட்டை கேட்டு, கால் செய்து யுவன், முத்துக்குமார் காம்போவை மிஸ் பண்ணுவதாக கூறினேன். அந்தளவிற்கு நான் தீவிர யுவன் ரசிகன்.
இன்றைக்கும் ’நேசிப்பாயா’ பாடல்களை கேட்கும் போது விண்டேஜ் வைப் உள்ளது. யுவன் சார் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த காலகட்டத்தில் நான் கல்லூரி படித்து கொண்டிருந்தேன்” என்றார். இதனைத்தொடர்ந்து விழா கூட்டத்தில் ஒருவர் சிவகார்த்திகேயனை பார்த்து ’தமிழ்நாட்டு நாயகன்’ என கத்தி கூச்சலிட்டார். பின்னர் அதர்வா பற்றி பேசிய சிவகார்த்திகேயன், ”உங்களை பற்றி தற்போது எதுவும் பேசவில்லை, சுதா கொங்குரா இயக்கத்தில் நாம் இணைந்து நடித்து வரும் படத்திற்காக சேர்த்து வைத்துள்ளேன். அப்படத்தில் அதர்வா கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும்” என கூறினார்.