சூர்யாவின் படத்திற்கு மட்டும் கடுமையான விமர்சனம் : நடிகை ஜோதிகா வேதனை...

நடிகர் சூர்யாவின் படத்திற்கு மட்டும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக அவரது மனைவியும், நடிகையுமான ஜோதிகா வேதனை தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சூர்யா. நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். சுமார் ஏழு வருடங்களுக்கு மேல் காதலித்த இவர்கள் இரு வீட்டாரின் சம்மதத்துடன் 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். திரையுலகில் நட்சத்திர ஜோடிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக சூர்யா மற்றும் ஜோதிகா இருந்து வருகின்றனர்.
தற்போது ஜோதிகா பாலிவுட்டில் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் டப்பா கார்டெல் என்கிற வெப் தொடர் வெளியானது. நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆன இந்த வெப் தொடரின் புரமோஷன் நிகழ்ச்சியில் ஜோதிகா கலந்து கொண்டார். அப்போது `கங்குவா’ விமர்சனங்கள் குறித்தும் பேசியிருந்தார்.
கங்குவா படம் ரிலீஸ் ஆனபோதே, அப்படத்தின் மீது வந்த நெகடிவ் விமர்சனங்கள் எல்லைமீறி இருப்பதாகவும், படத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும், அதில் உள்ள நிறைகளை பற்றி யாருமே பேசவில்லை என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், இந்த பேட்டியில் பேசிய அவர், “பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்ற பல மோசமான திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன்.
ஆனால் அந்த படங்களுக்கெல்லாம் கணிவோடு விமர்சனம் செய்துவிடுவார்கள். ஆனால் என்னுடைய கணவர் நடித்த திரைப்படங்களைப் பொறுத்தவரை அந்த விமர்சனங்கள் மிகவும் கடுமையாக இருப்பதை நான் உணர்கிறேன் என ஜோதிகா தெரிவித்தார். மேலும், அந்தப் படத்தில் சில பகுதிகள் நன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், மொத்தமாகப் படத்திற்குப் பெரும் சிரத்தையுடன் உழைத்திருக்கிறார்கள். எனினும், சில மோசமானப் படங்களைவிட கடுமையான விமர்சனங்களை அந்தப் படம் சந்தித்ததைப் பார்த்தபோது, அது என்னை மனதளவில் மிகவும் பாதித்தது ஊடகங்கள் இதை கண்டு கொள்ளாமல் பாரபட்சமாக நடந்துகொள்வது வருத்தமாக இருந்தது என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.