அண்ணா பல்கலை விவகாரம்: பெண்களுக்கு ஆதரவாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பதிவு
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மட்டும்தான் குற்றவாளி என போலீஸ் தரப்பிலும், அரசு தரப்பிலும் கூறப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "பெண்கள் ஆண்களுடன் பேசக்கூடாது, அவர் அங்கு சென்றிருக்க கூடாது என பேசக்கூடாது. பெண்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது, காதலிப்பது பெண்களின் தனிப்பட்ட சுதந்திரம்" என்று நீதிபதி தெரிவித்தார்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "பெண்களுக்கு அதிக சக்தியும் பலமும் கிடைக்கட்டும். இதில் சம்பந்தப்பட்ட அனைத்து ஆண்களும் நரகத்தில் அழுகட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.