‘பராசக்தி’ படப்பிடிப்பின் போது அதர்வாவை சூழ்ந்த ரசிகர்கள்…!

பராசக்தி படத்தின் படப்பிடிப்பின் போது ரசிகர்கள் நடிகர் அதர்வாவை சூழ்ந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் பராசக்தி. இந்த படத்தில் ஸ்ரீலீலாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரவி கே சந்திரன் இப்படத்தில் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். சுதா கொங்கரா இப்படத்தை இயக்குகிறார். இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கும் இந்த படத்தில் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
இந்த படமானது 1965 காலகட்டத்தில் நடந்த இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. இதில் சிவகார்த்திகேயன், அதர்வா ஆகியோர் கல்லூரி மாணவர்களாக நடிக்கின்றனர். அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டு சென்னை, மதுரை, சிதம்பரம் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பராசக்தி படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதேசமயம் நடிகர் அதர்வாவை ரசிகர்கள் சூழ்ந்து தங்களின் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.