‘பேபி ஜான்’ படத்துக்கு சிக்கல்... என்ன காரணம் தெரியுமா?
இந்தியில் ‘புஷ்பா 2’ படத்தின் வசூல் குறையாதது, ‘பேபி ஜான்’ படத்துக்கு சிக்கலாக அமைந்திருக்கிறது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் டிசம்பர் 5-ம் தேதி வெளியான படம் ‘புஷ்பா 2’. உலகளவில் ரூ.1,500 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்து வருகிறது. இந்தியில் அதிக வசூல் செய்த ‘ஸ்ட்ரீ 2’ படத்தினை 15 நாட்களில் தாண்டி முதல் இடத்தினை பிடித்துள்ளது ‘புஷ்பா 2’.
இந்தியில் ‘புஷ்பா 2’ படத்தின் வசூல் குறையவில்லை. மல்டிப்ளக்ஸ் மற்றும் ஒற்றை திரையரங்குகள் என அனைத்திலுமே வார நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் நல்ல வசூல் செய்து வருகிறது. இதனால் இப்போதைய சூழலில் ‘புஷ்பா 2’ படத்தைத் தூக்க வாய்ப்பில்லை.
இந்தச் சூழல் அட்லி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பேபி ஜான்’ படத்துக்கு சிக்கலாக அமைந்திருக்கிறது. ‘தெறி’ இந்தி ரீமேக்காக உருவாகியுள்ள இப்படம் பெரும் பொருட்செலவில் உருவாகி டிசம்பர் 25-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
எதிர்பார்த்த திரையரங்குகளை விட மிக குறைவான திரையரங்குகளே கிடைக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. இதற்கு காரணமாக ‘புஷ்பா 2’ அமைந்திருக்கிறது. பல்வேறு விநியோகஸ்தர்களுமே எதிர்பார்த்த முன்பணத்தைக் கொடுக்க தயாராக இல்லை. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் சுமுக தீர்வு எட்டப்படும் எனத் தெரிகிறது.