பிக் பாஸ் காதல் ஜோடி அமீர் - பாவனி திருமணம்... புகைப்படங்கள் வைரல்...!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் காதலர்களான அமீர் - பாவனி ஜோடிக்கு இன்று (ஏப். 20) திருமணம் நடைபெற்றது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்குபெற்ற அமீரும் பாவனியும் நீண்ட காலமாக காதலித்துவந்த நிலையில், இன்று அவர்கள் திருமணம் செய்துகொண்டுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் மலரும் காதல் பலவும் டிஆர்பிக்காக செய்யப்படும் நாடகம் என பேசப்படும் நிலையில், அமீர் - பாவனி ஜோடி இதற்கு விதிவிலக்காக மாறியுள்ளனர்.
இருவரும் தொடர்ந்து தங்கள் துறைகளில் அடுத்தடுத்து நடித்து வந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு திருமண நாளை அறிவித்தனர். அதன்படி இருவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகப் பங்கேற்ற பாவனியிடம், வைல்ட்கார்டு மூலம் நுழைந்த அமீர் தனது காதலை வெளிப்படுத்தினார்.
பிக் பாஸ் டிஆர்பிக்காக இவ்வாறு செய்யப்படுகிறது என பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், நிகழ்ச்சிக்கு பின்னரும் பாவனி மீது அதே அளவு அமீர் காதல் கொண்டிருந்தார். ரியாலிடி நிகழ்ச்சி மேடையில் அமீர் வெளிப்படுத்திய காதலை பாவனி ஏற்றுக்கொண்டார். தங்கள் வாழ்வின் அடுத்தகட்டத்தை நோக்கி முடிவெடுக்கும் தருணத்தில் இருவரும் நெகிழ்ச்சியாக அந்த மேடையைப் பகிர்ந்துகொண்டனர்.
இருவரும் இணைந்து நடிகர் அஜித் குமாரின் துணிவு படத்தில் நடித்திருந்தனர். அப்படத்தில் இருவரின் பாத்திரங்களும் வெகுவாக பாராட்டப்பட்டது. நடிகை பாவனி சமீபத்தில் ஓம் காளி ஜெய் காளி என்ற இணையத் தொடரில் நடித்திருந்தார். விமல் உடனான பாவனியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. சின்ன திரை நடிகையான பாவனி, ரெட்டை வால் குருவி தொடரில் தமிழில் அறிமுகமானார். இதற்கு முன்பு தெலுங்கு மொழியில் 3 தொடர்களில் பாவனி நடித்திருந்தார்.
தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பாசமலர், சின்னத் தம்பி, நீலக்குயில், ராசாத்தி உள்ளிட்டத் தொடர்களில் நடித்து புகழ் பெற்றார். இதேபோன்று, தொழில்முறை நடனக் கலைஞரான அமீர், நடனத்தில் முழுவதும் கவனம் செலுத்திவருகிறார். இருவரும் தங்கள் துறையில் பயணித்துவரும் நிலையில், ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இன்று திருமணம் செய்துகொண்டனர். சமூக வலைதளங்களில் புதுமண ஜோடிகளுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.