கார் பார்க்கிங் தகராறு விவகாரம்... நடிகர் தர்ஷன் மீதான வழக்கு ரத்து...!

கார் பார்க்கிங் தகராறு தொடர்பாக, நடிகர் தர்ஷன் மற்றும் நீதிபதியின் மகன் தரப்பிற்கும் சமரசம் ஏற்பட்டதால், இரு தரப்பினருக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிக்பாஸ் பிரபலமும், நடிகருமான தர்ஷனின் வீடு சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள பாரி தெருவில் அமைந்துள்ளது. வீட்டின் அருகே தேநீர் கடை ஒன்று உள்ள நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி கயல்விழியின் மகன் தனது மனைவியுடன் காரில் கடைக்கு வந்தார். அப்போது காரை தர்ஷனின் வீட்டு முன்பாக நிறுத்தியதாகவும், அது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
இதில் ஒரு பெண் மற்றும் நீதிபதியின் மகன் காயமடைந்தனர். நண்பருடன் சேர்ந்து தர்ஷன், தங்களை தாக்கியதாக நீதிபதியின் மகன், அவரது மனைவி மற்றும் மாமியார் தரப்பில் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல, நடிகர் தர்ஷன் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த இரு புகார்களின் அடிப்படையிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.இந்த நிலையில், தர்ஷன் தரப்பிற்கும், தங்கள் தரப்பிற்கும் இடையே சமரசம் ஏற்பட்டுவிட்டதால் தங்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நீதிபதியின் மகன் ஆதிச்சூடி மற்றும் அவரது மனைவி லாவண்யா, மாமியார் மகேஸ்வரி தரப்பிலும், நடிகர் தர்ஷன் மற்றும் அவரது நண்பர் லோகேஷ் தரப்பிலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், சமரச மனுவை ஏற்று நடிகர் தர்ஷன், அவரது நண்பர் மற்றும் நீதிபதியின் மகன் மற்றும் மனைவி, மாமியார் மீது பதியப்பட்ட இரண்டு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.